வழக்கு செலவில் 60 சதவீதத்தை பிசிசிஐக்கு செலுத்த பாக். கிரிக்கெட் வாரியத்துக்கு ஐசிசி உத்தரவு
பிசிசிஐ கோரிய வழக்கு செலவுத் தொகையில் 60 சதவீதத்தை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் செலுத்த வேண்டும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) உத்தரவிட்டுள்ளது.
பிசிசிஐ கோரிய வழக்கு செலவுத் தொகையில் 60 சதவீதத்தை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் செலுத்த வேண்டும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) உத்தரவிட்டுள்ளது.
இரு தரப்பினர் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி 2015 முதல் 2023 வரை 6 பரஸ்பர தொடர்களை நடத்த இந்திய கிரிக்கெட்கட்டுப்பாட்டு வாரியம் பிசிசிஐ ஏற்பாடு செய்யவில்லை. இதனால் தனக்கு ஏற்பட்ட பொருளாதார இழப்பீடு ரூ.447 கோடியை பிசிசிஐ செலுத்த வேண்டும் எனக்கோரி, பிசிபி வழக்கு தொடர்ந்தது.
புரிந்துணர்வு ஒப்பந்தம் தங்களை கட்டுப்படுத்தாது எனவும், ஐசிசிக்கான வருவாய் பகிர்வு முறையில் தனக்கு ஆதரவு தருவதாக கூறிய உறுதிமொழியை பாகிஸ்தான் கடைபிடிக்கவில்லை எனக்கூறி பிசிசிஐ பதில் மனு தாக்கல் செய்தது.
இந்த வழக்கை விசாரிக்க 3 நபர் கொண்ட தகராறு தீர்ப்பாயத்தை ஐசிசி நிறுவியது. கடந்த அக்டோபர் 1 முதல் 3-ஆம் தேதி வரை துபையில் வழக்கு விசாரணை நடைபெற்றது. இதில் பாக். வாரியத்தின் மனுவை தள்ளுபடி செய்தது தீர்ப்பாயம்.
தனது வழக்கு செலவை பாக். வாரியம் செலுத்த வேண்டும் என பிசிசிஐ கோரியிருந்தது. இந்நிலையில் இந்திய வாரியம் கோரிய தொகையில் 60 சதவீதத்தை பாக். வாரியம் செலுத்த வேண்டும்.
பிசிசிஐ 40 சதவீதம் செலுத்த உத்தரவு: அதே நேரத்தில் வழக்கை விசாரிக்க அமைக்கப்பட்ட மூவர் குழு தீர்ப்பாயத்துக்கு ஆன நிர்வாக செலவுகளில் 40 சதவீதத்தை பிசிசிஐ செலுத்த வேண்டும் என ஐசிசி உத்தரவிட்டது. இது புரிந்துணர்வு ஒப்பந்தம் இல்லை. வெறும் கடிதம் மட்டுமே என பிசிசிஐ தெளிவு படுத்தியிருக்க வேண்டும் எனவும் தீர்ப்பாயம் கருத்து தெரிவித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.