சிஎஸ்கேவின் வெற்றி குறித்து விவாதித்தோம்: ஆசியக் கோப்பையை வென்ற இலங்கை கேப்டன்
ஐபிஎல் கோப்பையை வென்ற சிஎஸ்கேவின் வெற்றி பற்றி விவாதித்தோம் என இலங்கை கேப்டன்...
இறுதிச்சுற்றுக்கு முன்பு துபையில் டாஸில் தோற்று ஐபிஎல் கோப்பையை வென்ற சிஎஸ்கேவின் வெற்றி பற்றி விவாதித்தோம் என இலங்கை கேப்டன் தசுன் ஷனகா கூறியுள்ளார்.
இலங்கை - பாகிஸ்தான் அணிகள் மோதிய ஆசியக் கோப்பை இறுதிச்சுற்று துபையில் நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இலங்கை 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் எடுத்தது. 8.5 ஓவர்களில் முதல் 5 விக்கெட்டுகளை 58 ரன்களுக்கு இழந்தது இலங்கை அணி. இதன்பிறகு பனுகா ராஜபக்ச அபாரமாக விளையாடி ஆட்டமிழக்காமல் 45 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 71 ரன்கள் எடுத்து சரிவை மீட்டார். ஹசரங்கா 36 ரன்கள் எடுத்தார். ஹாரிஸ் ராஃப் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பாகிஸ்தான் அணி, 20 ஓவர்களில் 147 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ரிஸ்வான் 55 ரன்கள் எடுத்தார். பிரமோத் மதுஷன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து இறுதிச்சுற்றை 23 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இலங்கை அணி 6-வது முறையாக ஆசியக் கோப்பையை வென்றுள்ளது.
ஆட்ட நாயகன் விருது ராஜபக்சவுக்கும் தொடர் நாயகன் விருது ஹசரங்காவுக்கும் வழங்கப்பட்டது. ஆசியக் கோப்பையை வென்ற இலங்கை கேப்டன் தசுன் ஷனகா கூறியதாவது:
Advertisement
Advertisement
ரசிகர்கள் எங்களுக்கு மிகவும் ஆதரவளித்தார்கள். ஐபிஎல் 2021 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி கோப்பையை வென்றது. அதுபற்றி நாங்கள் விவாதித்தோம். ஆப்கானிஸ்தானிடம் முதல் ஆட்டத்தில் தோற்றோம். அதுபோல எந்த நல்ல அணிக்கும் நடக்கும். ஒரு நல்ல விஷயத்துக்காக எங்களுக்கு அது நடந்தது. அதன்பிறகு அணியில் தீவிரமான விவாதம் நடைபெற்றது. எங்களிடம் திறமையான வீரர்கள் உள்ளார்கள். அவர்கள் திறமையை நன்கு வெளிப்படுத்தினார்கள். அதனால் தான் நாங்கள் சாம்பியன் ஆகியுள்ளோம் என்றார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.