இலங்கைக்கு எதிரான டி20 தொடரை வென்ற பிறகு பேசிய இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் அதிரடியான ஆட்டத்தை தொடர்வோம் என தெரிவித்தார்.
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் நேற்று முன் தினம் (ஜூலை 27) தொடங்கியது. முதல் டி20 போட்டி நேற்று முன் தினமும், இரண்டாவது போட்டி நேற்றும் நடைபெற்றது. இந்த இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றது. இதன்மூலம், 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இந்த நிலையில், இந்திய அணி அதன் அதிரடியான ஆட்டத்தைத் தொடரும் என அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக டி20 தொடரை வென்ற பிறகு அவர் பேசியதாவது: எந்த மாதிரியான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பது குறித்து டி20 தொடர் தொடங்குவதற்கு முன்பாக பேசினோம். குறைந்த இலக்குகளை துரத்தினாலும், அதிக ரன்கள் என்ற இலக்கை துரத்தினாலும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என விரும்புகிறோம். மழை பெய்ததால் 160 ரன்களுக்குள் இலக்கு இருந்தால் நன்றாக இருக்கும் என நினைத்தோம். மழை எங்களுக்கு உதவியது. பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடினார்கள். வீரர்கள் விளையாடிய விதம் மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை (ஜூலை 30) நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.