தேசிய துப்பாக்கி சுடும் சாம்பியன்ஷிப்: சிம்ரன்ப்ரீத் கௌர் ப்ரார், மனு பாக்கருக்கு தங்கம்!
தில்லியில் நடைபெறும் தேசிய துப்பாக்கி சுடும் சாம்பியன்ஷிப் பற்றி...
தேசிய துப்பாக்கி சுடும் சாம்பியன்ஷிப் போட்டியில் இளம் வீராங்கனை சிம்ரன்ப்ரீத் கௌர் ப்ராரும் மூத்த வீராங்கனை மனு பாக்கரும் தங்கம் வென்று அசத்தினர்.
புது தில்லியின் துக்ளகாபாத் துப்பாக்கி சுடும் மையத்தில் நடைபெறும் இப்போட்டியில் ஜூனியர் மகளிர் 25மீட்டர் பிஸ்டல் பிரிவில், 21 வயதான சிம்ரன்ப்ரீத் கௌர் தங்கம் வென்றார். இதே பிரிவில், ஹரியாணாவின் துவாராம் ப்ரணவி வெள்ளியும், பலக் வெண்கலமும் வென்றனர்.
எனினும், ஜூனியர் மகளிர் தனிநபர் பட்டியலில் ஒட்டுமொத்தமாக 578 புள்ளிகளைப் பெற்ற சிம்ரன்ப்ரீத் கௌர் இரண்டாமிடம் பிடித்தார். முதலிடத்தில், பரிஷா குப்தாவும் மூன்றாமிடத்தில் பலக்கும் உள்ளனர்.
ஜூனியர் மகளிர் அணிகள் பிரிவில் ஆர்மி மார்க்ஸ்மேன்ஷிப் யூனிட்(ராணுவ குழு) தங்கமும், தில்லி வெள்ளி பதக்கத்தையும், பஞ்சாப் வெண்கலப் பதக்கத்தையும் தட்டிச் சென்றது.
சீனியர் மகளிர் 25 மீட்டர் பிஸ்டல் போட்டியில் மனு பாக்கர் தங்கம் வென்றார். கர்நாடகத்தைச் சேர்ந்த டி. திவ்யா வெள்ளியும், அஞ்சலி சௌத்ரி வெண்கலமும் வென்றனர். அதில், ஒலிம்பிக் போட்டியாளரான ரிதம் சங்க்வானுக்கு நான்காமிடமே கிடைத்தது.