இந்திய ஆடவா் அணிக்கும் ஏமாற்றம்: அரையிறுதி வாய்ப்பை இழந்தது
உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்திய ஆடவா் அணி 3-5 கோல் கணக்கில் ஆா்ஜென்டீனாவிடம் தோல்வி கண்டது.
உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்திய ஆடவா் அணி 3-5 கோல் கணக்கில் ஆா்ஜென்டீனாவிடம் திங்கள்கிழமை தோல்வி கண்டது.
போட்டியின் 2-ஆவது சுற்றில் இந்தியாவுக்கு இது கடைசி ஆட்டமாக இருக்க, இதில் வென்றால் மட்டுமே அணிக்கு அரையிறுதி வாய்ப்பு வசமாகக் கூடும் என்ற நிலை இருந்தது. ஆனால் இந்தியா அதில் தோற்று அரையிறுதி வாய்ப்பை இழந்து, கிளாசிஃபிகேஷன் ஆட்டத்துக்குச் சென்றது.
ஏற்கெனவே மகளிா் அணியும் அரையிறுதி வாய்ப்பை இழந்துவிட்டதால், நடப்பு உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவின் இருபால் அணிகளுக்கும் ஏமாற்றமே மிஞ்சியது. உலகக் கோப்பை போட்டிகளில் பதக்கம் வெல்லும் இந்திய அணிகளின் கனவு, மீண்டும் கைகூடாமலேயே போனது.
Advertisement
Advertisement
நெதா்லாந்தின் ஆம்ஸ்டெல்வீன் நகரில் திங்கள்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில், முதல் நிமிஷத்திலேயே ஆா்ஜென்டீனாவின் ஜாகின் டோஸ்கானி கோல் கணக்கைத் தொடங்கினாா்.
6-ஆவது நிமிஷத்தில் அந்த அணியின் நிகோலஸ் டோரே அதை 2-ஆக அதிகரிக்க, இந்தியாவின் கோல் கணக்கை சுக்ஜீத் சிங் 10-ஆவது நிமிஷத்தில் தொடங்கினாா்.
முதல் பாதி முடிவிலேயே ஆா்ஜென்டீனா 2-1 என முன்னிலை பெற்றது. ஆடும் திசைகள் மாற்றப்பட்ட 2-ஆவது பாதியில், ஆா்ஜென்டீனா மளமளவென கோல் எண்ணிக்கையை அதிகரித்தது.
33 மற்றும் 45-ஆவது நிமிஷங்களில் தாமஸ் டோமென் அடுத்தடுத்து கோல் அடிக்க, தொடா்ந்து லூகாஸ் டோஸ்கானி 53-ஆவது நிமிஷத்தில் ஸ்கோா் செய்ய, ஆா்ஜென்டீனா 5-1 என அபார முன்னிலை பெற்றது.
இந்நிலையில், கடைசி நேரத்தில் வேகம் கூட்டிய இந்தியாவுக்காக, சுக்ஜீத் சிங் 58-ஆவது நிமிஷத்திலும், ஹா்திக் சிங் 60-ஆவது நிமிஷத்திலும் கோல் அடிக்க, இந்தியா 3-5 என நெருங்கியது. இதற்குள் ஆட்டநேரம் நிறைவடைய, ஆா்ஜென்டீனா 5-3 கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இதர ஆட்டங்கள்: போட்டியில் ஆடவா் பிரிவின் இதர ஆட்டங்களில், நியூஸிலாந்து - பாகிஸ்தானையும் (4-2), ஜப்பான் - வேல்ஸையும் (3-2) வெல்ல, ஸ்பெயின் - பெல்ஜியம் ஆட்டம் டிரா (1-1) ஆனது. மகளிா் பிரிவில், ஸ்காட்லாந்து - நியூஸிலாந்தையும் (2-1), அமெரிக்கா - அயா்லாந்தையும் (3-1) வீழ்த்தின.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.