பாகுபலி -2 திரையிடும் உரிமையை முடக்கக் கோரி வழக்கு
தமிழகத்தில் பாகுபலி- 2 படத்தின் திரையிடும் உரிமையை முடக்கக் கோரி மேலும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.
தமிழகத்தில் பாகுபலி- 2 படத்தின் திரையிடும் உரிமையை முடக்கக் கோரி மேலும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் அண்ணா நகரைச் சேர்ந்த எஸ்.கார்த்திகேயன் தாக்கல் செய்த மனு விவரம்: 'கே' புரொடக்ஷன் நிறுவன உரிமையாளர் எஸ்.என்.ராஜராஜன், என்னிடம் கடந்த 2014 முதல் 2016-ஆம் ஆண்டு வரை பல தவணைகளில் ரூ.1.11 கோடியைக் கடனாகப் பெற்றார். இந்த கடனை அவர் திருப்பிச் செலுத்தமுடியவில்லை.
அவருக்குக் கொடுத்த கடன் தொகை வட்டியுடன் ரூ.1.48 கோடி. இந்நிலையில், பாகுபலி -2 என்ற திரைப்படத்தின் உரிமைகளை அவர் பெற்றுள்ளார். இந்த உரிமைகளைப் பெற போதியளவில் நிதி உதவி அளித்துள்ளேன். என்னிடம் பெற்ற கடன் தொகையைக் கேட்ட போது, எனக்கு வங்கிக் காசோலை வழங்கினார். அந்தக் காசோலையை வங்கியில் செலுத்திய போது, அவரது வங்கிக் கணக்கு முடிக்கப்பட்டு விட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. எனவே, எனக்குத் தர வேண்டிய தொகைக்கு சொத்து உத்தரவாதம் வழங்க அவருக்கு உத்தரவிட வேண்டும். இவற்றை மேற்கொள்ளாமல், தமிழகத்தில் பாகுபலி-2 படத்தை வெளியிடக்கூடாது. மேலும் படம் வெளியிடுவதை முடக்கி வைக்க உத்தரவிட வேண்டும் என, மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.
Advertisement
இந்த மனு நீதிபதி கே.கல்யாணசுந்தரம் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனுவுக்கு 'கே' புரொடக்ஷன் நிறுவன உரிமையாளர் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை வரும் 25-ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.