ஆர்.கே.நகரில் சரியாக தேர்தல் பணியாற்றாத நிர்வாகிகள் மீது நடவடிக்கை: திமுக உயர்நிலை செயல் திட்டக்குழுவில் தீர்மானம்!
நடந்து முடிந்த ஆர்.கே.நகரில் சரியாக தேர்தல் பணியாற்றாத நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுப்பது என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடந்த திமுக உயர்நிலை செயல் திட்டக்குழுவில் தீர்மானம்...
சென்னை: நடந்து முடிந்த ஆர்.கே.நகரில் சரியாக தேர்தல் பணியாற்றாத நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுப்பது என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடந்த திமுக உயர்நிலை செயல் திட்டக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அண்ணா அறிவாலயத்தில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டம் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. ஆர்.கே.நகர் தேர்தல் தோல்வி, கட்சி அமைப்பு நிர்வாகிகள் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் திமுக பொதுச்செயலாளர் க. அன்பழகன், திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன், துணைப் பொதுச் செயலாளர்கள் ஐ.பெரியசாமி, வி.பி.துரைசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., செய்தி தொடர்பு செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி., மற்றும் தலைமை நிலைய செயலாளர்கள், குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
Advertisement
Advertisement
கூட்டத்தின் முடிவில் ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அவை பின்வருமாறு:
நடந்து முடிந்த ஆர்.கே.நகரில் சரியாக தேர்தல் பணியாற்றாத நிர்வாகிகள் யாராக இருந்தாலும், என்ன பதவியிலிருந்தாலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
பெரும்பான்மை இல்லாத அதிமுக அரசு நீடிப்பது அரசியலமைப்பு சட்டத்திற்கே களங்கம். எனவே அதிமுக அரசு உடனடியாக ராஜிநாமா செய்ய வேண்டும்.
திமுக என்னும் இயக்கத்தின் மீது களங்கம் சுமத்தும் பொருட்டு உருவாக்கப்பட்ட 2G என்னும் மாயாவி காற்றில் கலந்த ஒரு கற்பனை கணக்காகும்.
ஒக்கி புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை சிரமைக்க என ரூ.13520 கோடியினை நிவாரண நிதியாக மத்திய அரசிடம் இருந்து மாநில அரசு கோரிப் பெற வேண்டும்.
தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் குடுத்த வேட்பாளர்கள் உடனடியாக தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும்.
இந்த தீர்மானங்கள் அந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.