திராவிடர் கழகப் பரப்புரைக்கு அனுமதி மறுப்பு! தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்!
திராவிடர் கழகம் பரப்புரைப் பயணத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கண்டனம்...
திராவிடர் கழகத்தின் இருசக்கர வாகனப் பரப்புரைப் பயணத்துக்கு தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
திராவிடர் கழகத்தின் தலைவர் கீ. வீரமணி தலைமையில் சென்னையில் இன்று (ஜூலை 30) நடைபெறவிருந்த இருசக்கர வாகனப் பரப்புரைப் பயணத்துக்குத் தமிழக அரசு அனுமதி மறுத்துள்ளது.
இதனால், அந்தப் பரப்புரைப் பயணம் ரத்து செய்யப்பட்டதுடன், திராவிடர் கழகத்தின் தலைமையகமான பெரியார் திடலில் காவல் துறையினர் குவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், நீட் எதிர்ப்புப் போராட்டத்தைக் கண்டு பாஜக அரசைவிடத் தவெக அரசுதான் அதிகம் மிரளுகிறது எனக் கூறி திராவிடர் கழக இருசக்கர வாகனப் பரப்புரை அனுமதி மறுக்கப்பட்டதற்கு, தமிழக முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி, அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில்,
“நீட், ஈ.டபிள்யூ.எஸ். இடஒதுக்கீடு எதிர்ப்புப் போராட்டத்தைக் கண்டு ஒன்றிய பா.ஜ.க. அரசைவிடத் த.வெ.க. அரசுதான் அதிகம் மிரளுகிறது!
தந்தை பெரியாரைக் கொள்கைத் தலைவர் எனச் சொந்தம் கொண்டாடும் த.வெ.க. அரசு பெரியார் திடலிலேயே போலிசாரைக் குவித்திருப்பது ஏன்? திராவிடர் கழகத்தின் இருசக்கர வாகனப் பரப்புரைப் பயணத்துக்குக் கடைசி நிமிடத்தில் அனுமதி மறுத்ததற்கு என்ன காரணம்?
யாரின் அழுத்தத்துக்குப் பணிந்து இதைச் செய்கிறார்கள்? கடந்த காலங்களில் மிக அமைதியான முறையில், அறவழியில், கண்ணியத்தோடு இதே போராட்டங்களைத் தாய்க்கழகமாம் திராவிடர் கழகம் கட்டுப்பாட்டுடன் நடத்திக் காட்டியிருக்கிறது. அத்தகைய இயக்கத்தின் பரப்புரைப் பயணத்தைத் தடை செய்வது வன்மையான கண்டனத்துக்குரியது.
சிவப்பும் மஞ்சளும் சேர்ந்தால் கிடைப்பது காவி என்பது இதன் மூலம் உறுதியாகிவிட்டது.
அடக்குமுறை அரசியலைக் கைவிட்டு, அவர்களின் பரப்புரைப் பயணத்துக்கு உரிய அனுமதியைத் த.வெ.க. அரசு வழங்கிட வேண்டும்!” என வலியுறுத்தியுள்ளார்.
M.K. Stalin has condemned the TN government's refusal to grant permission for the Dravidar Kazhagam's two-wheeler campaign rally.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.