ஒடும் அரசுப் பேருந்தில் கத்தியை காட்டி முந்திரி வியாபாரியிடம் ரூ.2.57 லட்சம் கொள்ளை
பண்ருட்டி அருகே அரசுப் பேருந்தில் பயணித்த முந்திரி வியாபாரியிடம் மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி ரூ.2.57 லட்சம்
பண்ருட்டி: பண்ருட்டி அருகே அரசுப் பேருந்தில் பயணித்த முந்திரி வியாபாரியிடம் மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி ரூ.2.57 லட்சம் கொள்ளையடித்து தப்பிச்சென்றுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பண்ருட்டி பெரியகாட்டுபாளையம் கிராமத்தை சேரந்தவர் கனகவேல்(51). முந்தரி வியாபாரியான இவர், நேற்று சென்னையில் முந்தரி வியாபாரம் செய்துவிட்டு வசூலான பணத்தை எடுத்துக்கொண்டு சென்னையிலிருந்து பேருந்தில் அதிகாலை பண்ருட்டி வந்தடைந்தார்.
பின்னர், பண்ருட்டி பேருந்து நிலையத்தில் இருந்த தடம் எண் 26 சேந்தநாடு செல்லும் நகர பேருந்தில் தனது கிராமத்திற்கு சென்றுள்ளார். அப்போது, பேருந்து பிள்ளையார்குப்பம் அருகே சென்றுகொண்டிருந்த போது, பேருந்தில் தலைகவசம் அணிந்திருந்த மர்ம நபர்கள் 2 பேர் கனகவேலிடம் கத்தியை காட்டி பணத்தை பறித்துக்கொண்டு சாலையில் தலைகவசம் அணிந்து இருசக்கர வாகனத்தில் தாயாராக காத்திருந்த மர்ம நபர்களுடன் தப்பிச்சென்றுவிட்டனர்.
இதுகுறித்து கடாம்புலியூர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் முந்தரி வியாபாரிடம் ரூ.2.57 லட்சம் கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.