பணியாளர் பற்றாக்குறை: தத்தளிக்கும் தீயணைப்புத் துறை
தமிழகத்தில் தீயணைப்புத் துறையில் 50 சதவீத பணியிடங்கள் காலியாக உள்ளதால் தீயணைப்பு வீரர்கள் பணிச்சுமையால் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
தமிழகத்தில் தீயணைப்புத் துறையில் 50 சதவீத பணியிடங்கள் காலியாக உள்ளதால் தீயணைப்பு வீரர்கள் பணிச்சுமையால் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
பேரிடர் காலத்தில் மக்களை காப்பதில் முதன்மையான அரசுத் துறையாக திகழ்வது தீயணைப்புத் துறை தான். தீ விபத்து, மழை வெள்ளம், இயற்கை பேரிடர்களில் தீயணைப்புத் துறையினர் உயிரை பணயம் வைத்து அர்ப்பணிப்புடன் பணியாற்றுகின்றனர்.
தமிழகத்தில் 317 தீயணைப்பு நிலையங்கள் உள்ளன. இத்துறையில் சுமார் 6 ஆயிரம் பணியாளர்கள் தேவைப்படுகின்றனர். ஆனால், தற்போது 3,500 பணியாளர்களே உள்ளனர்.
பாதி அளவு பணியாளர்களே உள்ளதால், வேலைப் பளுவால் தீயணைப்புத்துறையினர் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர்.
குறிப்பாக பணியாளர்கள் விடுப்பு எடுப்பதற்கும், ஓய்வு எடுப்பதற்கும் முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். அதேபோல், இத்துறையில் 25 ஆண்டுகளாக பணியாற்றுபவர்களுக்கு பதவி உயர்வும், ஊதிய உயர்வும் வழங்கப்பட வேண்டும்.
ஆனால், பணியாளர்கள் பற்றாக்குறையாலும், பணி சுமையாலும், பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கப் பெறாமல் அவதிப்படுகின்றனர்.
எனவே, பொதுமக்களுக்கு தக்க நேரத்தில் சென்று உதவி வரும் தீயணைப்பு துறை மீது அரசு கவனம் செலுத்தி, குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என தீயணைப்புத் துறை பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், இந்த துறைக்கு தேவையான உபகரணங்களை போதுமான அளவில் வழங்க வேண்டும் எனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.