FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

காந்தியின் படைப்புகள் ஓராண்டுக்குள் தமிழில் மொழிபெயர்க்கப்படும்: அமைச்சர் கே.பாண்டியராஜன்

மகாத்மா காந்தியின் நூல்கள், கடிதங்கள் உள்பட அவரது படைப்புகள் அனைத்தும் ஓராண்டுக்குள் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடப்படும் என தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் கூறினார்.

Updated On : 21 நவம்பர் 2017, 12:41 am IST
பகிர்:

மகாத்மா காந்தியின் நூல்கள், கடிதங்கள் உள்பட அவரது படைப்புகள் அனைத்தும் ஓராண்டுக்குள் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடப்படும் என தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் கூறினார்.
 சென்னையில் உள்ள காந்தி கல்வி நிலையம் சார்பில், காந்தியவாதி டி.டி.திருமலை நினைவாக மாநில அளவிலான பரிசுகள் வழங்கும் விழா தி.நகர் தக்கர்பாபா வித்யாலயத்தில் திங்கள்கிழமை (நவ.20) நடைபெற்றது.
 13 சிறந்த மாணவர்கள்: விழாவில், பள்ளிகளில் நடைபெற்ற காந்தியத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 13 மாணவர்கள், தேர்வுக்காக அதிகளவில் மாணவர்களை பங்கேற்கச் செய்த பள்ளிகளுக்கு தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் பரிசுகளை வழங்கிப் பேசியது: தென்னாப்பிரிக்காவில் எந்த ரயில் நிலையத்தின் அருகே ரயிலில் இருந்து காந்தி தள்ளி விடப்பட்டாரோ அதே ரயில் நிலையத்துக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. தோல்வி, அவமானத்தை ஒரு பொருட்டாக எண்ணாமல், தன்னம்பிக்கையோடு போராடினால் சாதிக்க முடியும் என்பதற்கு காந்தியின் வாழ்க்கை ஒரு பாடமாகும். "பொது வெளியில் என்னென்ன மாற்றங்கள் நிகழ வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அந்த மாற்றங்கள் முதலில் உங்களுக்குள் நிகழ வேண்டும்' என்ற காந்தியின் கூற்றை இளைய தலைமுறை மெய்ப்பிக்க வேண்டும் என்றார்.
 50 ஆயிரம் பக்கங்கள் கொண்ட காந்தி படைப்புகள்: இதைத் தொடர்ந்து அமைச்சர் பாண்டியராஜன் செய்தியாளர்களிடம் கூறியது:- மகாத்மா காந்தியின் நூல்கள், கடிதங்கள் என 50 ஆயிரம் பக்கங்கள் கொண்ட அவரது படைப்புகளை 100 தொகுதிகளாக மத்திய அரசின் பதிப்புத் துறை வெளியிட்டுள்ளது. பெருமை வாய்ந்த அந்தப் படைப்புகள் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், உலகத் தமிழ்ச்சங்கம் ஆகியவற்றின் மூலமாக தமிழில் ஓராண்டுக்குள் மொழி பெயர்த்து வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும்.
 தமிழ் இருக்கைக்கு நிதி அளித்தால்...ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைவதற்காக நிதி திரட்டப்பட்டு வருகிறது.
 அதற்கு தமிழக அரசின்சார்பில் ரூ.10 கோடி அளிக்கப்பட்ட நிலையில் தற்போது ஆசிரியர்கள், தொழிலதிபர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் நிதியளித்து வருகின்றனர். இன்னும் ரூ.8 கோடி நிதி தேவைப்படுகிறது.
 நிதி வழங்குவோர் சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் மூலம் அளித்தால் அந்தத் தொகைக்கு வரி விலக்கு அளிக்கப்படும் என்றார்.
 இந்த நிகழ்ச்சியில் புதுதில்லியில் உள்ள மத்திய அரசின் பதிப்பகப் பிரிவின் தலைமை இயக்குநர் சாதனா ரூட், காந்தி கல்வி நிலையச் செயலர் எஸ்.பாண்டியன், கௌரவ இயக்குநர் அ.அண்ணாமலை, தக்கர் பாபா வித்யாலய சமிதி செயலர் பி.மாருதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments