சட்டப்பேரவை காலியிடங்கள் எண்ணிக்கை 19-ஆக உயர்வு: திருப்பரங்குன்றத்துக்கு 6 மாதங்களில் தேர்தல்
திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ., ஏ.கே.போஸ் (அதிமுக) மறைவால் சட்டப் பேரவையில் காலியிடங்களின் எண்ணிக்கை 19-ஆக உயர்ந்துள்ளது.
திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ., ஏ.கே.போஸ் (அதிமுக) மறைவால் சட்டப் பேரவையில் காலியிடங்களின் எண்ணிக்கை 19-ஆக உயர்ந்துள்ளது.
போஸ் மறைவு காரணமாக ஏற்பட்ட காலியிடம் ஒன்றாக இருந்தாலும், டிடிவி தினகரனுக்கு ஆதரவு தெரிவித்ததால் 18 எம்.எல்.ஏ.-க்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 18 எம்.எல்.ஏ.-க்களின் பதவி நீக்கம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், போஸ் மறைவு காரணமாக திருப்பரங்குன்றத்தில் ஏற்படும் காலியிடத்துக்கு அடுத்த ஆறு மாதங்களில் இடைத் தேர்தல் நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்த இடைத் தேர்தல் மக்களவைத் தேர்தலுடன் இணைந்து நடத்தப்படுமா அல்லது அதற்கு முன்பாகவே நடக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
யாருக்கு எத்தனை எம்.எல்.ஏ.-க்கள்?: 15-ஆவது சட்டப் பேரவையில் 234 எம்.எல்.ஏ.-க்கள் உள்ளனர். அதில், அதிமுகவின் பலம் 116-ஆகவும், திமுக 89, இந்திய தேசிய காங்கிரஸ் 8, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 1, சுயேச்சை 1, பேரவைத் தலைவர் 1, காலியிடங்கள் 18 என்ற அளவில் கட்சிகளின் பலம் உள்ளது.
இந்தச் சூழ்நிலையில், திருப்பரங்குன்றம் தொகுதி எம்.எல்.ஏ.-வாக இருந்த ஏ.கே.போஸ் வியாழக்கிழமை அதிகாலை திடீரென மரணம் அடைந்தார். இதனால், பேரவையில் அதிமுகவின் பலம் 115-ஆகக் குறைந்துள்ளது. போஸின் மறைவு குறித்த தகவல் சட்டப் பேரவைச் செயலகத்தின் வாயிலாக தேர்தல் ஆணையத்துக்குத் தெரிவிக்கப்படும். அதன் பின் திருப்பரங்குன்றம் தொகுதி காலியானதாக அறிவிக்கப்படும்.
எந்தவொரு தொகுதிக்கும், காலியானதாக அறிவிக்கப்பட்ட தினத்தில் இருந்து ஆறு மாதங்களுக்குள் இடைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதன்படி, அடுத்த ஆண்டு ஜனவரிக்குள்ளாக திருப்பரங்குன்றம் சட்டப் பேரவைத் தொகுதிக்கு இடைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
ஆனால், அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல், ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நடக்க வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. எனவே, அந்தத் தேர்தலுடன் திருப்பரங்குன்றம் இடைத் தேர்தல் நடத்தப்படுமா அல்லது மக்களவைத் தேர்தலுக்கு முன்பாகவே தேர்தல் நடத்தப்படுமா என்பது குறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியுடன் தேர்தல் ஆணையம் ஆலோசித்த பிறகே முடிவெடுக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொடர் இடைத் தேர்தல்: கடந்த 2016-ஆம் ஆண்டு நடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் திருப்பரங்குன்றம் தொகுதி எம்.எல்.ஏ.-வாக இருந்த எஸ்.எம்.சீனிவேலு திடீரென மரணம் அடைந்தார். இதன்பின், அந்தத் தொகுதிக்கு நடந்த இடைத் தேர்தலில் ஏ.கே.போஸ் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.