மாணவர்களை சாதிவாரியாக பிரித்த தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம்
அரசுப் பள்ளியில் மாணவர்களிடம் சாதிப் பாகுபாட்டுடன் நடந்து கொண்டது தொடர்பாக, அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
அரசுப் பள்ளியில் மாணவர்களிடம் சாதிப் பாகுபாட்டுடன் நடந்து கொண்டது தொடர்பாக, அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
கடலூர் மாவட்டம், தொழுதூர் அருகே உள்ள எழுத்தூரில் அரசு தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியை என்.அனுசுயா. இவர் பள்ளியில் மாணவர்களை சாதிப் பாகுபாட்டுடன் தனித் தனியாக அமர வைத்ததாகவும், அவர்களுக்கு தனித் தனி குடிநீர் குடங்கள் வைத்ததாகவும் புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக கிராம மக்கள் கடந்த 31-ஆம் தேதி பள்ளியை முற்றுகையிட்டனர்.
சம்பவம் தொடர்பாக கடலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் உத்தரவின்பேரில், விருத்தாசலம் மாவட்ட கல்வி அலுவலர் செல்வராசு விசாரணை நடத்தினார். வட்டாட்சியர் சத்தியன், விருத்தாசலம் கோட்டாட்சியர் ச.சந்தோஷினி சந்திரா ஆகியோரும் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கே.பழனிசாமி கூறியதாவது:
கல்வித் துறை, வருவாய்த் துறைகள் சார்பில் நடத்தப்பட்ட விசாரணை தொடர்பான அறிக்கை கிடைக்கப் பெற்றது. அதில், மாணவர்களிடம் தலைமை ஆசிரியை வித்தியாசத்துடன் நடந்துக்கொண்டது தெரியவந்துள்ளது. மேலும், பொதுமக்களிடமும் தனது நிலையை மீறி தவறாக நடந்துள்ளார். இந்த அறிக்கையை கல்வித் துறை இயக்குநரிடம் அனுப்பி வைத்துள்ளோம்.
அதன்படி, தலைமை ஆசிரியை என்.அனுசுயாவை பணியிடை நீக்கம் செய்திட கல்வித் துறை இயக்குநர் அலுவலகத்திலிருந்து உத்தரவு கிடைக்கப்பெற்றுள்ளது. இந்த உத்தரவு தலைமை ஆசிரியையிடம் வெள்ளிக்கிழமை (ஆக.3) வழங்கப்படும் என்றார் அவர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.