FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

நாற்காலியில் அமர்ந்தார் கருணாநிதி

திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் சீராகி உள்ள நிலையில், சிறிது நேரம் அவர் நாற்காலியில் அமர வைக்கப்பட்டார்.

Updated On : 3 ஆகஸ்ட் 2018, 1:37 am IST
காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கருணாநிதியின் உடல் நலம் குறித்து அவரது மகன் மு.க.ஸ்டாலின், மகள் கனிமொழியிடம் விசாரித்த கேரள முதல்வர் பினராயி விஜயன். 
பகிர்:


திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் சீராகி உள்ள நிலையில், சிறிது நேரம் அவர் நாற்காலியில் அமர வைக்கப்பட்டார்.
கருணாநிதியின் உடல் நலம் தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன், காவேரி மருத்துவமனைக்கு வியாழக்கிழமை வந்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினிடம் நலம் விசாரித்தார்.
ரத்த அழுத்தம் குறைந்ததன் காரணமாக ஜூலை 28 அதிகாலை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த ஜூலை 29-ஆம் தேதியன்று கருணாநிதிக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதனால் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி அவரது உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டது. ஆனால், மருத்துவக் குழுவினர் அளித்த தீவிர சிகிச்சையின் மூலம் அவர் உடல் நிலை சீரானது. அதைத் தொடர்ந்து, சிறுநீரகப் பாதையில் ஏற்பட்ட தொற்றைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளில் மருத்துவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதில் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படாவிட்டாலும், தொடர்ந்து ஒரே நிலையில் நீடித்து வருகிறது.
குடும்பத்தினர் மகிழ்ச்சி: இந்த நிலையில், ரத்த இயக்கங்களைச் சீராக்கும் முயற்சிகளில் ஒன்றாக புதன்கிழமை இரவு கருணாநிதி சக்கர நாற்காலியில் உட்கார வைக்கப்பட்டார். அரை மணி நேரம் அவர் உட்கார்ந்த நிலையில் இருந்துள்ளார். பிறகு, மீண்டும் அவர் படுக்க வைக்கப்பட்டுள்ளார். இந்தக் காட்சியைப் பார்த்த கருணாநிதியின் குடும்பத்தினர் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பினராயி விஜயன் நலம் விசாரிப்பு: இதனிடையே, காவேரி மருத்துவமனைக்கு வியாழக்கிழமை 10.40 மணியளவில் கேரள முதல்வர் பினராயி விஜயன் வந்தார். மு.க.ஸ்டாலின் மற்றும் கனிமொழியைச் சந்தித்து, கருணாநிதியின் உடல் நலம் தொடர்பாக விசாரித்தார்.
பிறகு செய்தியாளர்களிடம் பினராயி விஜயன் கூறியது: மு.க.ஸ்டாலினிடம் நலம் விசாரித்தேன். கருணாநிதி குணம் பெற்று வருவதாகத் தெரிவித்தார். கருணாநிதி பிறவிப் போராளி என்பது அனைவருக்கும் தெரியும். அவரின் மன உறுதிதான் அவரை விரைவாக குணமடைய வைத்துள்ளது. பூரண குணமடைய வாழ்த்துகள் என்றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணனும் உடன் வந்தார். காந்தியின் பேரனும், மேற்கு வங்க முன்னாள் ஆளுநருமான கோபாலகிருஷ்ண காந்தி மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன் ஆகியோர் ஸ்டாலினைச் சந்தித்து நலம் விசாரித்தனர்.
வீட்டுக்குத் திரும்புங்கள்: கனிமொழி, மருத்துவமனை வாயிலில் திரண்டிருந்த தொண்டர்களிடம் வியாழக்கிழமை பேசினார். அப்போது, கருணாநிதியின் உடல் நலம் நன்றாக இருப்பதால், அனைவரும் வீடு திரும்புமாறு கேட்டுக்கொண்டார்.
அறிவாலயம் வந்தார்: கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் இருந்து மு.க.ஸ்டாலின் அறிவாலயத்துக்குச் செல்லாமல் இருந்தார். தற்போது, கருணாநிதி உடல்நலம் சீராகியுள்ளதைத் தொடர்ந்து அறிவாலயத்துக்கு வியாழக்கிழமை வந்து கட்சிப் பணிகளில் ஈடுபட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments