ரூ. 40 ஆயிரம் லஞ்சம்: மின் வாரிய அதிகாரிகள் 2 பேர் கைது
கோவையை அடுத்த துடியலூர் அருகே மின் இணைப்புக்கு ரூ. 40 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக மின் வாரிய செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர் ஆகியோரை லஞ்ச ஒழிப்புக் காவல் துறையினர் திங்கள்கிழமை கைது செய்தனர்
கோவையை அடுத்த துடியலூர் அருகே மின் இணைப்புக்கு ரூ. 40 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக மின் வாரிய செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர் ஆகியோரை லஞ்ச ஒழிப்புக் காவல் துறையினர் திங்கள்கிழமை கைது செய்தனர்.
துடியலூரை அடுத்த அஞ்சுகம் நகரைச் சேர்ந்தவர் சிவகுமார். இவர், புதிதாக துவங்க உள்ள தொழிற்சாலைக்கு மின் இணைப்பு வேண்டி விண்ணப்பித்திருந்தார். இதற்காக அவரிடம் கே.வடமதுரை மின் வாரிய செயற்பொறியாளர் நந்தகோபால் (57), துடியலூர் தெற்கு உதவி செயற்பொறியாளர் அய்யாவு (54) ஆகியோர் தலா ரூ. 20 ஆயிரம் லஞ்சம் கேட்டனராம். இதுகுறித்து கோவை லஞ்ச ஒழிப்பு காவல் துறையிடம் சிவகுமார் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து ரசாயனம் தடவிய ரூ. 40 ஆயிரம் நோட்டுகளை லஞ்ச ஒழிப்புக் காவல் துறையினர் சிவகுமாரிடம் திங்கள்கிழமை கொடுத்து அனுப்பியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, அய்யாவுவின் அலுவலகத்துக்கு சிவகுமார் சென்றுள்ளார். அப்போது அய்யாவு அவரை அழைத்துக் கொண்டு வடமதுரையில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்துக்குச் சென்றுள்ளார். இதன்பிறகு செயற்பொறியாளர் நந்தகோபால், உதவி செயற்பொறியாளர் அய்யாவு ஆகியோரிடம் தலா ரூ.20 ஆயிரம் பணத்தை சிவகுமார் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி ராஜேஷ் தலைமையிலான காவல் துறையினர் இருவரையும் கைது செய்தனர். மேலும், இந்த சம்பவத்தில் தொடர்புடைய 2 மின் வாரிய அதிகாரிகள் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.