கரூரில் 5 கிராமங்களில் புகுந்தது வெள்ள நீர்: 1,000 ஏக்கர் வாழை, கோரை மூழ்கியது
காவிரியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் கரூர் மாவட்டத்தில் தவிட்டுப்பாளையம், திருமுக்கூடலூர் உள்ளிட்ட 5 கிராமங்களில் தண்ணீர் புகுந்தது. இதனால் சுமார் 1,000 ஏக்கர் வாழை, கோரை பயிர் நீரில் மூழ்கியது.
காவிரியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் கரூர் மாவட்டத்தில் தவிட்டுப்பாளையம், திருமுக்கூடலூர் உள்ளிட்ட 5 கிராமங்களில் தண்ணீர் புகுந்தது. இதனால் சுமார் 1,000 ஏக்கர் வாழை, கோரை பயிர் நீரில் மூழ்கியது.
மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கும் 1.80 லட்சம் கன அடி நீர் அப்படியே காவிரியாற்றில் திறக்கப்படுகிறது. இந்நிலையில் பவானிசாகர் அணையில் 50,000 கன அடி நீர் திறக்கப்பட்டு அந்த நீர் பவானி கூடுதுறையில் காவிரியாற்றுடன் கலந்து வருகிறது. இதனால் காவிரியில் மேட்டூர் அணைக்கு கீழே 2.30 லட்சம் கன அடி நீர் வருவதால் கரூர் மாவட்டத்தில் தாழ்வான பகுதியான தவுட்டுப்பாளையம், மேலமாயனூர் பகுதியில் வியாழக்கிழமை அதிகாலை 3 மணியளவில் வெள்ள நீர் ஊருக்குள் புகுந்தது.
மேலும் அமராவதியில் வரும் 11,000 கன அடி நீர் திருமுக்கூடலூரில் காவிரியுடன் கலக்கிறது. ஏற்கெனவே காவிரியில் 2.30 லட்சம் கன அடிநீர் செல்வதால் அமராவதி நீர் அந்த தண்ணீரை எதிர்கொள்ள முடியாமல் காவிரி நீரும், அமராவதி நீரும் சேர்ந்து திருமுக்கூடலூர், அரங்கநாதன் பேட்டை, சோமூர், மேலமாயனூர் உள்ளிட்ட கிராமங்களுக்குள் புகுந்தது. இதனால் அப்பகுதியில் உள்ள சுமார் 1,000 ஏக்கரில் பயிரிடப்பட்டிருக்கும் கோரை, வாழைகள், மரவள்ளிக்கிழங்குச் செடிகள் மூழ்கின.
தவுட்டுப்பாளையம் பகுதியில் தண்ணீர் புகுந்த பகுதிகளையும், அங்கிருந்தோர் வெளியேற்றப்பட்டு அங்குள்ள பள்ளியில் தங்க வைக்கப்பட்டிருப்பதையும் மக்களவை துணைத் தலைவர் மு. தம்பிதுரை, அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், மாவட்டக் கண்காணிப்பு அலுவலர் விஜயராஜ்குமார் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் த. அன்பழகன் தலைமையில் பார்வையிட்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.