ராகுல் பாதுகாப்பு விவகாரம்: மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்
மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த சென்னை வந்த, காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைபாடு விவகாரம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில்
மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த சென்னை வந்த, காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைபாடு விவகாரம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக வழக்குரைஞர் ஏ.பி.சூரியபிரகாசம் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், திமுக தலைவர் கருணாநிதி கடந்த ஆகஸ்ட் 7 -ஆம் தேதி காலமானார். பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டிருந்தது. அவரது உடலுக்கு தேசிய கட்சிகளின் தலைவர்கள், பல்வேறு மாநில முதல்வர்கள் அஞ்சலி செலுத்தினர். கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி வந்தபோது அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை. போலீஸாரின் கவனக் குறைபாட்டால், அவருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பில் பெரும் குளறுபடி ஏற்பட்டது. ராகுல் காந்திக்கு எஸ்பிஜி எனப்படும் சிறப்பு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.
தேசிய அளவிலான தலைவர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பில் குறைபாடு ஏற்பட்டால் அது பெரும் ஆபத்தை உண்டாக்க நேரிடும். எனவே, ராகுல் காந்திக்கு பாதுகாப்பு குறைபாடு ஏற்படுத்திய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்.
பாதுகாப்பு குறைபாடு குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும், கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்தபோது, கூட்ட நெரிசலில் சிக்க உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்' எனக் கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இதுதொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டு, விசாரணையை வரும் செப்டம்பர் 14 -ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.