வாஜ்பாய் அஸ்திக்கு முதல்வர் பழனிசாமி நேரில் அஞ்சலி
சென்னைக்கு கொண்டு வரப்பட்ட மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அஸ்திக்கு முதல்வர் பழனிசாமி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
சென்னை: சென்னைக்கு கொண்டு வரப்பட்ட மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அஸ்திக்கு முதல்வர் பழனிசாமி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
உடல்நலக் குறைவின் காரணமாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் பிரதமரும், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவருமான வாஜ்பாய் கடந்த 16-ந்தேதி மாலை காலமானார். மறுநாள் அவரது உடலானது 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யபட்டது
இதனைத் தொடர்ந்து அவரது அஸ்தியினை நாடு முழுவதும் உள்ள ஆறுகளில் கரைப்பது என்று முடிவு செய்யப்பட்டது. இதற்காக பாரதிய ஜனதா கட்சி மாநிலத் தலைவர்கள் ஒவ்வொருவரிடமும் வாஜ்பாயின் அஸ்தி அடங்கிய கலசம் வழங்குவது என்று முடிவெடுக்கப்பட்டது.
Advertisement
அதன்படி வாஜ்பாயின் அஸ்தி அடங்கிய கலசமானது தமிழக பாஜக தலைவர் தமிழிசை மற்றும் மத்திய அமைச்சர் போன் ராதாகிருஷ்ணனிடம் தில்லியில் புதன் காலை ஒப்படைக்கப்பட்டது.
தமிழகம் சார்பாக அஸ்தியை பெற்று கொண்ட பின்னர் தமிழிசை சவுந்தரராஜன் தில்லியில் செய்தியாளர்களிடம் பேசும் பொழுது, 'வாஜ்பாயின் அஸ்தியானது பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் வகையில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுலகமான கமலாலயத்தில் இன்றும், நாளையும் வைக்கப்படும். பின்னர் 26-ந்தேதி பவுர்ணமி அன்று அஸ்தி ஆற்றில் கரைக்கப்படும்' என்று தெரிவித்தார்.
பின்னர் புதன் மாலை சென்னை கொண்டு வரப்பட்ட அவரது அஸ்தியானது தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுலகமான கமலாலயத்தில் வைக்கப்பட்டது. அதற்கு வியாழன் காலை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இருவரும் நேரில்சென்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்
தமிழகத்தில் பதவியில் இருக்கும் பொழுது பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுலகத்திற்கு நேரில் சென்ற முதல் முதல்வர் பழனிசாமி என்பது குறிப்பிடத்தக்கது.