இளைஞர்களுக்கு 10 கட்டளைகள்: அன்புமணி ராமதாஸ்
மது ஒழிப்பு, பெண்கள் பாதுகாப்பு உள்பட 10 கட்டளைகளைப் பின்பற்றி தமிழகத்தை மேம்படுத்த வேண்டும் என பாட்டாளி இளைஞர் சங்க மாநிலப் பொதுக் கூட்டத்தில் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி
சென்னை: மது ஒழிப்பு, பெண்கள் பாதுகாப்பு உள்பட 10 கட்டளைகளைப் பின்பற்றி தமிழகத்தை மேம்படுத்த வேண்டும் என பாட்டாளி இளைஞர் சங்க மாநிலப் பொதுக் கூட்டத்தில் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினார்.
பாமக இளைஞரணியான பாட்டாளி இளைஞர் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் கட்சித் தலைவர் ஜி.கே. மணி தலைமையில் சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் புதிதாக நியமிக்கப்பட்ட மாநில, மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு இளைஞரணி தலைவர் அன்புணி, கட்சியின் நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் அடையாள அட்டையை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
இக்கூட்டத்தில் அன்புமணி பேசியது: புதிதாக நியமிக்கப்பட்ட மாநில, மாவட்ட நிர்வாகிகள் தங்களது பகுதிகளில் உள்ள நகராட்சி, பேரூராட்சி, கிளை இளைஞர் சங்க நிர்வாகிகளை நியமனம் செய்ய வேண்டும். ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் 100 இளைஞர்கள் இருக்க வேண்டும். தமிழகத்தில் பாமக ஆட்சிக்கு வருவதற்கு முன்பாகவே தமிழகத்தை முன்னேற்ற வேண்டும். கட்சியினருக்கு ஒழுக்கமும், கட்டுப்பாடும் மிகவும் அவசியம். அதை மீறி செயல்பட்டால் அன்றைய தினமே கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள்.
பாமக தினமும் வெளியிடும் அறிக்கைகளை செய்தித்தாள்களிலும், சமூக வலைதளங்களிலும் இளைஞர்கள் படித்தாலே தமிழகத்தில் உள்ள பிரச்னைகள் தெளிவாகப் புரியும். கல்வி, சுகாதாரம், வேளாண்மை, நீர் மேலாண்மை, தொழில் வளம், பெண்கள் பாதுகாப்பு, மது ஒழிப்பு, சுற்றுச்சூழல், நீர் நிலைகளைப் பாதுகாத்தல் உள்பட இந்தக் கூட்டத்தில் உறுதிமொழி எடுத்துக் கொண்ட கட்டளைகளையும் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்றார்.
பாமக நிறுவனர் ராமதாஸ்: தமிழகத்தில் அதிக இளைஞர்களைக் கொண்ட கட்சியாக பாமக உள்ளது. 10 கட்டளைகளையும் உறுதிமொழியாக ஏற்றுக் கொண்ட இளைஞர்கள் அது குறித்து தங்களது குடும்பத்தினரிடம் விளக்கி அவர்களை பாமகவுக்கு வாக்களிக்கச் செய்ய வேண்டும். தேர்தலில் வெற்றி பெறவும், கட்சியின் வளர்ச்சிக்கும் சமூக ஊடகங்கள் மிகவும் உறுதுணையாக இருக்கும். அதே நேரத்தில் அவற்றில் குறிப்பிட்ட கட்சிகள், நபர்களைப் பற்றி தவறான செய்திகளைப் பரப்புவது கண்டிக்கத்தக்கது.
தமிழகத்தில் பாமக உள்பட மூன்று எழுத்துகளில் சில அமைப்புகள் உள்ளன. அவற்றில் ஒரு அமைப்பு தமிழகத்தில் வேரூன்றாமல் நீங்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். புரையோடிக் கிடக்கும் தமிழகத்தைக் குணப்படுத்தும் சிறந்த மருத்துவராக அன்புமணி இருப்பார் என்றார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.