பேச்சுரிமை, எழுத்துரிமைக்கு ஆபத்து: ஒருங்கிணைந்து போராட மார்க்சிஸ்ட் அழைப்பு
நாடு முழுவதும் பேச்சுரிமை, எழுத்துரிமைக்கு ஏற்பட்டிருக்கும் ஆபத்தை எதிர்த்து அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றுபட்டு குரல் கொடுக்க முன்வர வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.
சென்னை: நாடு முழுவதும் பேச்சுரிமை, எழுத்துரிமைக்கு ஏற்பட்டிருக்கும் ஆபத்தை எதிர்த்து அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றுபட்டு குரல் கொடுக்க முன்வர வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.
இது தொடர்பாக அந்தக் கட்சியின் மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: நாடு முழுவதும் இடதுசாரி சிந்தனையாளர்கள், தலித் மற்றும் மனித உரிமை செயல்பாட்டாளர்கள் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர்.
மகாராஷ்டிரத்தில் பீமா கோரேகான் கிராமத்தில் உள்ள நினைவுச் சின்னத்தில் ஆயிரக்கணக்கான தலித் மக்கள் அஞ்சலி செலுத்தத் திரண்டபோது, சில பிரிவினர் வேண்டும் என்றே கலவரத்தைத் தூண்டி விட்டுள்ளனர். கலவரத்தைத் தூண்டி விட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், இடதுசாரி சிந்தனையாளர்கள் கவிஞர் வரவரராவ், மனித உரிமை செயல்பாட்டாளர் வெர்னான், கான்சால்வஸ், அருண் பெரைரா, வழக்குரைஞர் பரத்வாஜ் ஆகியோரைக் கைது செய்துள்ளனர்.
இதே போன்று தமிழகத்திலும் அதிமுக அரசு ஜனநாயக உரிமைகளை நசுக்கி வருகிறது. வெள்ள நிவாரண நிதி வசூலில் ஈடுபட்ட மாணவி வளர்மதியிடம் காவலர் ஒருவர் ஆபாசமாக நடந்து கொண்டதைத் தட்டிக் கேட்டதற்காக, அவர் மீதே கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளுக்காக போராடிய பழனியைச் சேர்ந்த பகத்சிங் ஆகியோர் மீது பொய்யான வழக்கு போட்டு சிறையில் அடைத்துள்ளனர். தமிழகம் முழுவதும் சாதாரண பிரச்னைகளுக்காக கூட போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், தெருமுனைக் கூட்டங்கள் நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. இத்தகைய, ஜனநாயக விரோத, அராஜகமான போக்கினை எதிர்த்து அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றுபட்டு குரல் கொடுக்க முன்வர வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.