FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஸ்டாலினை தலைவராக ஏற்கத் தயார்: அழகிரி

என்னை திமுகவில் இணைத்துக் கொண்டால்,  மு.க. ஸ்டாலினை தலைவராக ஏற்கத் தயார் என்று முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி கூறினார்.

30 ஜனவரி 2024, 10:08 pm IST
பகிர்:

மதுரை:  என்னை திமுகவில் இணைத்துக் கொண்டால்,  மு.க. ஸ்டாலினை தலைவராக ஏற்கத் தயார் என்று முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி கூறினார்.
திமுக தலைவர் கருணாநிதி மறைவை அடுத்து அழகிரி திமுகவில் மீண்டும் சேர்க்கப்படுவார். அவருக்கு முக்கிய பொறுப்பு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், அவரை திமுகவில் சேர்க்க மு.க. ஸ்டாலின் சம்மதிக்கவில்லை என்று கூறப்பட்டது.
இந்நிலையில்,  தனது பலத்தை நிரூபிக்க செப்டம்பர் 5-ஆம் தேதி சென்னையில் அமைதிப் பேரணி நடத்தப்படும் என்று அழகிரி அறிவித்து அதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தார். மேலும்,  திமுக தலைவர் பொறுப்பை மு.க. ஸ்டாலின்  ஏற்பது பற்றிய கேள்விகளை தொடர்ந்து தவிர்த்து வந்தார். இந்நிலையில்,  தற்போது கட்சியில் இணைத்துக் கொண்டால் ஸ்டாலினை தலைவராக ஏற்கத் தயார் எனக் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
மதுரை சத்யசாய் நகரில் உள்ள தனது இல்லத்தில் 7ஆவது நாளாக தனது ஆதரவாளர்களை வியாழக்கிழமை சந்தித்த அழகிரி பின்னர்  செய்தியாளர்களிடம் கூறியது:
சென்னையில் செப்டம்பர் 5-ஆம் தேதி நடைபெற உள்ள அமைதிப் பேரணியில் ஒரு லட்சத்துக்கும் குறையாத தொண்டர்கள் பங்கேற்க உள்ளனர்.  பேரணிக்கு ஆளும்கட்சித் தரப்பிலிருந்து எங்களுக்கு எந்த நெருக்கடியும் கொடுக்கவில்லை.
உண்மையான திமுக தொண்டர்கள் எங்கள் பக்கம்தான் இருக்கின்றனர். பொதுக்குழுவில் 1500 பேர் மட்டுமே உள்ளனர். பொதுக்குழு மட்டுமே திமுக அல்ல.  திமுகவைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவே, கட்சியில் இணைவதற்குப் போராடி வருகிறோம்.  எனக்கோ அல்லது எனது மகனுக்கோ கட்சியில் பதவி  கொடுக்க வேண்டும் என எதிர்பார்க்கவில்லை. ஆனால்,  எங்களை கட்சியில் சேர்க்காதது ஏன் எனத் தெரியவில்லை என்றார்.
திமுகவில் இணைத்துக் கொண்டால்,  மு.க. ஸ்டாலினை தலைவராக ஏற்றுக் கொள்வீர்களா எனக் கேட்டதற்கு, கட்சியில் இணைந்துவிட்டால் தலைவராக ஏற்றுக் கொள்ள வேண்டியதுதானே என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments