பிளாஸ்டிக் தடை: அரசாணையை ரத்து செய்ய கோரிய மனு தள்ளுபடி
பிளாஸ்டிக் தடை தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையை ரத்து செய்யக்கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
பிளாஸ்டிக் தடை தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையை ரத்து செய்யக்கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.
மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:
இந்தியாவில் பிளாஸ்டிக் பயன்பாடு கடந்த 10 ஆண்டுகளில் வெகுவாக அதிகரித்துள்ளது. தொடக்கத்தில் நாற்காலி, மேஜை போன்ற வீட்டு உபயோகப் பொருள்கள் தயாரிப்புக்கு மட்டுமே பிளாஸ்டிக் பயன்படுத்தப்பட்டது.
தற்போது உணவகங்களில் பயன்படுத்தப்படும் தேநீர் கோப்பைகள், தட்டுகள் உள்பட அனைத்திலும் பிளாஸ்டிக் உபயோகம் அதிகரித்து உள்ளது. பிளாஸ்டிக் கோப்பைகளில் தேநீர் அருந்துவது, உணவு உண்பது போன்றவற்றால் புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் பரவும் அபாயம் உள்ளது.
ஒடிஸா, ஆந்திரம் போன்ற மாநிலங்களில் பிளாஸ்டிக் பயன்பாடு குறைக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பிளாஸ்டிக் உபயோகிக்கும் கடைகள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்க உத்தரவிட வேண்டும் என நான் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில், தமிழக அரசு கடந்த ஜூன் 25ஆம் தேதி அரசாணை ஒன்றை பிறப்பித்தது.
அந்த அரசாணையானது, மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக்குக்கு மட்டுமே தடை விதிக்கும் வகையில் உள்ளது. இதனால் பிளாஸ்டிக் பயன்பாட்டை முழுமையாக குறைக்க இயலாது.
ஆகவே, இந்த அரசாணையை ரத்து செய்து, மத்திய அரசு விதிப்படி, பிளாஸ்டிக்கை முழுமையாக தடை செய்யும் வகையில் சட்டம் இயற்றவோ அல்லது புதிதாக அரசாணையை இயற்றவோ உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது மனுதாரர் தரப்பில், இதுபோன்ற அரசாணையைப் பிறப்பிக்க மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்று தெரிவித்தார்.
அதற்கு பதிலளித்த அரசுத்தரப்பு வழக்குரைஞர், மத்திய அரசு இதுபோன்ற அரசாணைகளை பிறப்பிக்க மாநில அரசுக்கு அதிகாரம் வழங்கியுள்ளது. ஏற்கெனவே 14 மாநிலங்களில் இதுபோல் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்யக்கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.