சாலைகளில் இடையூறாக பேனர்கள் வைக்கத் தடை: உயர்நீதிமன்றம்
தமிழகம் முழுவதும் பொதுமக்களுக்கு இடையூறாக சாலைகள் மற்றும் சாலையோரங்களில் பேனர்கள் வைக்கத் தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் பொதுமக்களுக்கு இடையூறாக சாலைகள் மற்றும் சாலையோரங்களில் பேனர்கள் வைக்கத் தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விதிகளுக்கு முரணாக சட்ட விரோதமாக பேனர்கள் வைக்கப்படுகிறது. இந்த சட்ட விரோத பேனர்களால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுவதோடு, பல்வேறு இடங்களில் விபத்துகளும் நடக்கின்றன. எனவே இந்த சட்ட விரோத பேனர்களுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும், விதிமுறைகளை மீறி வைக்கப்படும் பேனர்களை அகற்ற நடவடிக்கை எடுக்காத அரசு அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் சட்டவிரோதமாக அரசியல் கட்சியினர் வைக்கும் பேனர்களை அகற்ற நடவடிக்கைகள் எடுக்காத அதிகாரிகளுக்கு கண்டனம் தெரிவித்திருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்யநாராயணன் மற்றும் பி.ராஜமாணிக்கம் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னை மாநகராட்சி சார்பில் ஆஜரான வழக்குரைஞர், சட்டவிரோத பேனர் விவகாரத்தில் அதிகாரிகள் உயர்நீதிமன்றத்தின் உத்தரவை தீவிரமாக பின்பற்றுகின்றனர். விதிகளை மீறி வைக்கப்படும் பேனர்கள் அகற்றப்பட்டு விட்டன. இதுதொடர்பாக அரசியல் கட்சியினர் மீது வழக்குப்பதிவு செய்யவில்லை. ஆனால், இந்த விவகாரத்தில் அரசு உறுதியான நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார்.
மாநகராட்சி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையைப் படித்துப் பார்த்த நீதிபதிகள், சட்டவிரோத பேனர்கள் குறித்து கடந்த 2006-ஆம் ஆண்டு முதல் ஒரே மாதிரியான பதிலைத்தான் அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர். ஒரு நிகழ்வு நடக்கிறது என்றால், பேனர்கள் வைக்க குறைந்தது இரண்டு நாள்களுக்கு முன்னதாக அனுமதி பெற வேண்டும் என விதி கூறுகிறது. ஆனால், கடந்த டிசம்பர் 16-ஆம் தேதியன்று நடந்த நிகழ்ச்சிக்கு முதல் நாள் விண்ணப்பித்து உடனடியாக அனுமதி பெற்றுள்ளனர். அனுமதி வழங்கிய போலீஸ் அதிகாரிகள் மீது ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவில்லை என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மேலும் பேனர்கள் வைப்பது தொடர்பான விதிகள் மற்றும் உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவுகள் தீவிரமாக அமல்படுத்தப்படும். இனிவரும் காலங்களில் விதிமீறல்கள் எதுவும் இருக்காது என தமிழக அரசும், உள்ளாட்சி அமைப்புகளும் உறுதியான உத்தரவாதம் கொடுக்கும் வரை, தமிழகம் முழுவதும் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் எந்தவிதமான பேனர்களையும் வைக்கக்கூடாது.
தமிழகம் முழுவதும் சாலைகள் மற்றும் சாலையோரங்களை ஆக்கிரமித்து இருபுறங்களிலும் பொதுமக்கள் மற்றும் வாகனஓட்டிகளுக்கு இடையூறாக மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை பேனர்கள் வைக்கத் தடை விதிக்கப்படுகிறது என்று நீதிபதிகள் பிறப்பித்துள்ள உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.