பண மதிப்பிழப்பு சமயத்தில் நாமக்கல் கிறிஸ்டி நிறுவன உரிமையாளர் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட ரூ.245 கோடி
பண மதிப்பிழப்பு சமயத்தில் சர்ச்சைக்குரிய நாமக்கல் கிறிஸ்டி நிறுவன உரிமையாளர் கணக்கில் ரூ.245 கோடி டெபாசிட் செய்யப்பட்ட அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
திருச்செங்கோடு: பண மதிப்பிழப்பு சமயத்தில் சர்ச்சைக்குரிய நாமக்கல் கிறிஸ்டி நிறுவன உரிமையாளர் கணக்கில் ரூ.245 கோடி டெபாசிட் செய்யப்பட்ட அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு ஆண்டிபாளையத்தில் கிறிஸ்டி பிரைடு கிராம் நிறுவனம் தமிழக அரசின் சத்துணவு திட்டத்துக்கு முட்டை, பருப்பு, சத்துமாவு உள்ளிட்ட உணவுப் பொருள்களை வழங்கி வருகிறது. இந் நிறுவனம் மீது வரி ஏய்ப்பு உள்ளிட்ட பல்வேறு முறைகேடு புகார்கள் எழுந்ததால், கடந்த 5-ஆம் தேதி முதல் ஆண்டிபாளையத்தில் உள்ள இந்நிறுவன அலுவலகத்தில் வருமான வரித் துறை அதிகாரிகள் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், வட்டூரில் உள்ள நிறுவன உரிமையாளர் பி.எஸ். குமாரசாமியின் வீடு, நிறுவனத்தின் கணக்காளர்களான ராமச்சந்திரன், சங்கர் ஆகியோரது வீடுகள், உறவினர் வீடுகள் மற்றும் ராசிபுரம், சின்னவேப்பனம் என இந்நிறுவனத்துக்குச் சொந்தமான கிடங்குகளிலும் வருமான வரித் துறையினர் பல்வேறு குழுக்களாகப் பிரிந்து சென்று ஆய்வு நடத்தி வருகின்றனர்.
Advertisement
Advertisement
இந்நிறுவனத்தில் நடத்தப்பட்ட சோதனையின்போது, ஊழியர் கார்த்திகேயன் என்பவரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது வீட்டிலிருந்து வெளியே வந்த கார்த்திகேயன், முதல் மாடியிலிருந்து குதித்துத் தப்ப முயன்றதில் எலும்பு முறிவு ஏற்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்பு, தீவிர சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கார்த்திகேயனிடமிருந்து பல தகவல்கள் அடங்கிய ஏராளமான பென் டிரைவ்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் பண மதிப்பிழப்பு சமயத்தில் சர்ச்சைக்குரிய நாமக்கல் கிறிஸ்டி நிறுவன உரிமையாளர் கணக்கில் ரூ.245 கோடி டெபாசிட் செய்யப்பட்ட அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
வருமானவரித் துறை அதிகாரிகள் 5-வது நாளாக திங்கள்கிழமை இந்நிறுவனத்தில் சோதனையைத் தொடர்ந்தனர். அப்பொழுது 2016-ஆம் ஆண்டு நவம்பரில் இந்தியாவில் பண மதிப்பிழப்பு நடைமுறைப்படுத்தப்பட்ட சமயத்தில், கிறிஸ்டி நிறுவன உரிமையாளர் குமாரசாமி கணக்கில் ரூ.245 கோடி கூட்டுறவு வங்கியொன்றில் டெபாசிட் செய்யப்பட்ட அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, நிறுவனத்தின் உரிமையாளர் குமாரசாமியை நேரில் அழைத்து வந்து விசாரணை நடத்தப்பட உள்ளதாகவும், தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.