கைதி விடுவிக்கப்படாத விவகாரம்: உள்துறைச் செயலருக்கு நோட்டீஸ்
உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் கைதி விடுவிக்கப்படாத விவகாரம் தொடர்பாக, தமிழக உள்துறைச் செயலர், சிறைத் துறை ஏடிஜிபி உள்ளிட்டோர் விளக்கமளிக்க,
உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் கைதி விடுவிக்கப்படாத விவகாரம் தொடர்பாக, தமிழக உள்துறைச் செயலர், சிறைத் துறை ஏடிஜிபி உள்ளிட்டோர் விளக்கமளிக்க, மாநில மனித உரிமைகள் ஆணையம் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
மாநில மனித உரிமைகள் ஆணைய நீதிபதி டி.ஜெயச்சந்திரன், கோவை மத்திய சிறையில் கடந்த 22 -ஆம் தேதி ஆய்வு மேற்கொண்டார். அப்போது, ஆயுள் தண்டனைக் கைதியான ஜப்ரூ என்ற சையது ஜாபர் அகமது என்பவர், தன்னை சிறையில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று 2017 டிசம்பர் 14 -ஆம் தேதி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், இதுவரை தன்னை விடுவிக்க சிறைத் துறை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை' என்று புகார் தெரிவித்தார்.
இதுகுறித்து நீதிபதி டி.ஜெயச்சந்திரன் நடத்திய விசாரணையில், கடந்த 19 ஆண்டுகளாக ஜப்ரூ சிறையில் இருந்து வருவதும், 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்தவர்களை விடுதலை செய்ய கடந்த 2008 -இல் தமிழக அரசு பிறப்பித்த அரசாணையின் அடிப்படையில் ஜப்ரூவை விடுவிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் 2017-இல் உத்தரவிட்டதும் தெரிய வந்தது. இதற்கான உத்தரவு நகல் சிறைத் துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தபோதும், ஜப்ரூ சிறையில் இருந்து விடுவிக்கப்படாததும் தெரிய வந்தது.
தாமாக முன்வந்து வழக்கு: இதையடுத்து, இந்த விவகாரத்தை நீதிபதி டி.ஜெயச்சந்திரன் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்தார். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக தமிழக உள்துறைச் செயலர், சிறைத் துறை ஏடிஜிபி, கோவை மத்திய சிறைக் கண்காணிப்பாளர் ஆகியோர் விரிவான அறிக்கையை 2 வாரத்துக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி டி.ஜெயச்சந்திரன் உத்தரவிட்டார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.