FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

சிறந்த தொழில்முனைவோர் விருது பெற்ற 93 வயது ராதாபாய்!

புதுச்சேரியைச் சேர்ந்த 93 வயதான மூதாட்டி என். ராதாபாய்க்கு சிறந்த தொழில்முனைவோர் விருது-2018 வழங்கப்பட்டது.

Updated On : 29 ஜூன் 2018, 2:07 am IST
திருச்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற மகளிர் தொழில்முனைவோர் மாநாட்டு கண்காட்சியில் இயற்கை சார்ந்து உற்பத்தி செய்த பொருள்களை விற்பனைக்கு வைத்திருந்த ராதாபாய் மற்றும் அவரது மகன் ராசி ராமலிங்கம்.
பகிர்:

புதுச்சேரியைச் சேர்ந்த 93 வயதான மூதாட்டி என். ராதாபாய்க்கு சிறந்த தொழில்முனைவோர் விருது-2018 வழங்கப்பட்டது.
தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் சங்கம், பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து இந்த விருதை வழங்கின.
பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் மகளிரியல் துறை, தமிழ்நாடு தொழில்முனைவோர் சங்கம் ஆகியவை இணைந்து தமிழ்நாடு மகளிர் தொழில்முனைவோர் சங்க 12-ஆம் ஆண்டு மாநாடு மற்றும் மகளிர் தொழில்முனைவோருக்கான கருத்தரங்கு, கண்காட்சி ஆகியவற்றை திருச்சியில் உள்ள தூய வளனார் கல்லூரியில் புதன், வியாழக்கிழமைகளில் நடத்தின.
மாநாட்டின் நிறைவு நாளான வியாழக்கிழமை சிறந்த தொழில்முனைவோர் விருது பெற தமிழகம், புதுச்சேரியிலிருந்து 10 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இதில் புதுச்சேரி, பாக்கமுடையான்பட்டு, லாஸ்பேட்டையில் இறைவன் இயற்கை அங்காடி நடத்தி வரும் ராதாபாய் (93) சிறந்த தொழில்முனைவோர் விருது-2018-க்கு தேர்வானார். ராதாபாய்க்கு அந்த விருதை பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ப. மணிசங்கர் வழங்கினார்.
ராதாபாயின் கணவர் மறைந்த நீலகண்டன் ரெட்டியாரிடமிருந்து மரபு உணவு வழி மருத்துவத்தை கற்றுக் கொண்டு, இன்றைய தலைமுறையிடையே தமிழ் மருத்துவ மரபு வகை உணவுகள், மரபு வழி மருந்துப் பொருள்களை கொண்டு சேர்ப்பதில் பெரும் பங்காற்றி, சிறுதானிய ஊட்டச்சத்து உணவுகள், சிறு தானிய உணவு மிக்ஸ் என 3,600-க்கும் மேற்பட்ட இயற்கை மற்றும் இயற்கை சார்ந்த பொருள்களை தயாரித்து விற்பனை செய்கிறார். தனக்கு கிடைத்துள்ள விருதானது எதிர்கால தலைமுறையை ஊக்குவிக்க வேண்டும் என்றார் ராதாபாய்.
இவருக்குத் துணையாக இவரது மகனும், உணவுச் சித்தர் என அழைக்கப்படும் ராசி ராமலிங்கம், மரபு வழி வாழ்வியல் முறைகளை இளம்தலைமுறைக்கு கற்பித்து வருகிறார். ராசி உணவுப் பூங்கா என்ற பெயரில் சர்வதேச தரத்தில் பரம்பரை உணவு, மருந்து பொருள்களை தயாரித்து வருகிறார்.
இதேபோல, ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி நடத்தும் மதிவதனி, மாற்றுத் திறனாளிகளுக்கான ஆடை தயாரிக்கும் சாலினி விசாகன், செக்கு சமையல் எண்ணெய் உற்பத்தி செய்யும் ஜெ. அம்பிகா, காகிதத் தட்டு தயாரிக்கும் எம். ஆயிசா பேகம், அவுட்சோர்சிங் தொழில் நடத்தும் ஐஸ்வர்யா சீனிவாசன், அப்பளம் தயாரிக்கும் கே. கலைவாணி, தாம்பூலப்பை தயாரிக்கும் ராஜேஸ்வரி, சானிடரி நாப்கின் எரிப்பான் உற்பத்தி செய்யும் எ. தீபா, பால் பொருள்கள் தயாரிக்கும் ஜி. அகிலாண்டேஸ்வரி என மொத்தம் 10 பேருக்கு சிறந்த தொழில்முனைவோர் விருது வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments