FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

பேராசிரியை நிர்மலாதேவியிடம் மூன்றரை மணி நேரம் குரல் பரிசோதனை

கல்லூரி மாணவியரை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் கைது செய்யப்பட்ட பேராசிரியை நிர்மலாதேவியிடம், சென்னையில் வியாழக்கிழமை மூன்றரை மணி நேரம் குரல் பரிசோதனை நடைபெற்றது.

Updated On : 29 ஜூன் 2018, 2:36 am IST
சென்னை தடய அறிவியல் துறை அலுவலகத்துக்கு குரல் மாதிரி பரிசோதனைக்காக சிபிசிஐடி போலீஸாரால் வியாழக்கிழமை அழைத்து வரப்பட்ட பேராசிரியை நிர்மலா தேவி.
பகிர்:

கல்லூரி மாணவியரை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் கைது செய்யப்பட்ட பேராசிரியை நிர்மலாதேவியிடம், சென்னையில் வியாழக்கிழமை மூன்றரை மணி நேரம் குரல் பரிசோதனை நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரி மாணவியரை தவறான பாதைக்கு அழைத்ததாக, அக்கல்லூரியின் உதவிப் பேராசிரியை நிர்மலா தேவியை சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர். இதே வழக்கில் மதுரை காமராஜர் பல்கலைக் கழக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் மாணவியரிடம் செல்லிடப்பேசியில் நிர்மலாதேவி பேசிய ஒலிப்பதிவில், அவரது குரல்தான் பதிவாகியுள்ளதா என்பதை உறுதி செய்ய சிபிசிஐடி போலீஸார் முடிவு செய்தனர். இதற்காக நிர்மலாதேவி குரலை பரிசோதனை செய்யத் திட்டமிட்டனர். மதுரையில் இதற்கான வசதிகள் இல்லாததால், அவரை சென்னையில் உள்ள தடயவியல் துறை பரிசோதனைக் கூடத்துக்கு அழைத்துச் சென்று சோதனை செய்ய சிபிசிஐடி அதிகாரிகள் முடிவு செய்தனர்.
இதற்கு அனுமதி கோரி சிபிசிஐடி போலீஸார், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் அண்மையில் மனு செய்தனர். இம்மனுவை விசாரித்த நீதிமன்றம், ஜூன் 27, 28, 29 ஆகிய மூன்று நாள்கள் நிர்மலா தேவியை குரல் பரிசோதனைக்கு சென்னை அழைத்துச் செல்ல அனுமதி அளித்தது.
இந்த உத்தரவின்படி மதுரை மத்திய சிறையில் இருந்து புதன்கிழமை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நிர்மலாதேவி ஒரு வேனில் சென்னைக்கு அழைத்து வரப்பட்டு புழல் சிறையில் அனுமதிக்கப்பட்டார்.
மூன்றரை மணிநேரம் பரிசோதனை: இந்நிலையில், டி.ஜி.பி. அலுவலகம் அருகே உள்ள தடயவியல் துறை அலுவலகத்துக்கு நிர்மலாதேவி வியாழக்கிழமை காலை 10.20 மணிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டார். அங்குள்ள குரல் பரிசோதனைக் கூடத்தில், தடயவியல் துறை துணை இயக்குநர் ஹேமலதா, உதவி இயக்குநர் நடராஜன் ஆகியோர் நிர்மலாதேவியிடம் குரல் பரிசோதனை செய்தனர்.
ஏற்கெனவே மாணவிகளிடம் நிர்மலாதேவி செல்லிடப்பேசியில் பேசியிருந்த ஒலிப்பதிவில் உள்ள உரையாடலை, மீண்டும் நிர்மலாதேவியை பேச வைத்தனர். இதைத் தவிர்த்து சிபிசிஐடி அதிகாரிகள், ஏற்கெனவே தயாரித்து வைத்திருந்த சில வாக்கியங்களையும் நிர்மலாதேவியை பேச வைத்து, அவரது குரலைப் பதிவு செய்தனர். 
இந்த சோதனை பல கட்டங்களாக நடைபெற்றது. சுமார் மூன்றரை மணி நேர சோதனைக்கு பின்னர், நிர்மலாதேவி தடயவியல் துறை அலுவலகத்தில் இருந்து புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
பரிசோதனைக் கூடத்தில் பதிவு செய்யப்பட்ட நிர்மலாதேவியின் குரல் பல்வேறு சோதனைக்கு பின்னர் அறிக்கையாகத் தயார் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. நிர்மலாதேவி வெள்ளிக்கிழமை சென்னையில் இருந்து மதுரைக்கு அழைத்துச் செல்லப்படுவதாக சிபிசிஐடி அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments