ஜாதிக் கலவரத்தைத் தூண்டுகிறார்: நடிகை கஸ்தூரி மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்!
ஜாதிக் கலவரத்தை தூண்டும் வகையில் தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்துகளை பதிவு செய்கிறார் என்று நடிகை கஸ்தூரி மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை: ஜாதிக் கலவரத்தை தூண்டும் வகையில் தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்துகளை பதிவு செய்கிறார் என்று நடிகை கஸ்தூரி மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பிரபல சமூக வலைத்தளமான டிவிட்டரில் ஆர்வத்துடன் தொடர்ந்து இயங்கி வருபவர்களில் நடிகை கஸ்தூரியும் ஒருவர். இவர் சமீப காலமாக சினிமா, அரசியல் என பல்வேறு விஷயங்களிலும் தொடர்ச்சியாக தனது கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்.
இவரது சரமாரியான கருத்துகளுக்கு ஆதரவும் எதிர்ப்பும் சரி சமமாக எழுந்து வருகிறது. இந்நிலையில் கடந்த மாத இறுதியில் விழுப்புரம் மாவட்டம் வேலாம்புதூரில் நடந்த தலித் சிறுவன் படுகொலை, அவனது தாய் மீது தாக்குதல் மற்றும் அவனது சகோதரி வன்புணர்வு சம்பவத்தில் கொலையாளிகள் குறித்து அவர் ஒரு டிவிட்டர் பதிவிட்டிருந்தார்.
Advertisement
அதில் கொலைக்கும்பல் குறித்துப் பதிவிடும் பொழுது ஒரு குறிப்பிட்ட சமூகம் குறித்து சொல்வது போல கருத்துக் கூறினார். பின்னர் அது எழுத்துப்பிழையின் காரணமாக நேர்ந்தது என்று கூறி, அந்தப் பதிவினை நீக்கி விட்டார். அது தொடர்பாக அவர் பதிவும் இட்டிருந்தார்.
இந்நிலையில் ஜாதிக் கலவரத்தை தூண்டும் வகையில் தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்துகளை பதிவு செய்கிறார் என்று நடிகை கஸ்தூரி மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சமூக நீதி சத்ரிய பேரவை என்னும் அமைப்பைச் சார்ந்தவர்கள் அதன் தலைவர் பொன்குமார் தலைமையில் கூட்டாக வந்து புகார் கொடுத்துள்ளார்கள்.
முன்னதாக நடிகை ஸ்ரீதேவியின் மறைவின் போது ”அனைத்து தொலைக்காட்சி சேனல்களும் மறைந்த ஸ்ரீதேவியின் பாடல்கள் மற்றும் வீடியோக்களை ஒளிபரப்பி வருகிறார்கள். ஒருநாள் சன்னிலியோன் இறந்துவிட்டால் என்ன நடக்கும் என கவலைப்படுகிறேன்” என கஸ்தூரி இட்டிருந்த கேலிப் பதிவு பலரது கண்டனத்துக்கு ஆளானது குறிப்பிடத்தக்கது.