இமயமலை புறப்படுகிறார் நடிகர் ரஜினிகாந்த்!
அரசியலுக்கு வருவதாக அறிவித்த பின்னர் நடிகர் ரஜினிகாந்த் முதன்முறையாக இமயமலைப் பயணிக்கிறார்.
நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் ஈடுபட்டப்போவதாகக் கூறியுள்ளார். இதையடுத்து அவருடைய ரசிகர்கள் மிகவும் உற்சாகமடைந்துள்ளனர். மேலும் சட்டப்பேரவைத் தேர்தலில் மட்டும் தற்போது களமிறங்க திட்டமிட்டுள்ளதாகக் கூறியவர், கட்சியின் கட்டமைப்பை வலிமைப்படுத்துமாறும் தனது ரசிகர்களிடம் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நடந்த தனியார் மருத்துவ ஆராய்ச்சி கல்லூரியில் மறைந்த முதல்வர் எம்ஜிஆர் சிலையைத் திறந்து வைத்தார். அப்போது, தமிழகத்தில் தலைமைக்கும், தலைவருக்கும் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அதை நிரப்பவே நான் வந்துள்ளேன் என்று ரஜினிகாந்த் பேசினார்.
இதற்கு அதிமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசத்தை பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தொடர்ந்து விமரிசித்து வருகின்றனர். இதற்கிடையில், ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள காலா திரைப்படம் வெளியாகவுள்ளது. அதுபோல 2.0 படத்தின் கிராஃபிக்ஸ் காட்சிப் பணிகளும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.
Advertisement
எனவே இவ்விரு படங்களின் வெளியீடு நெருங்கி வரும் நிலையில், தனது அரசியல் நிலைப்பாட்டையும் தெரிவித்துவிட்ட ரஜினி, தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் புதுப்படம் ஒன்றில் நடிக்கவும் சம்மதம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நீண்ட நாட்களுக்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்த் இமயமலைப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், சென்னையில் இருந்து நாளை விமானம் மூலம் சிம்லா சென்று அங்கிருந்து தரம்சாலா, ரிஷிகேஷ் ஆகிய இடங்களுக்குப் பயணிக்கும் ரஜினி, இறுதியாக இமயமலை செல்ல திட்டமிட்டுள்ளார்.
அங்கு தனது ஆன்மீக குருவான பாபா குகைக்குச் செல்கிறார். இந்த பயணத்தின் போது அங்கு தான் கட்டியுள்ள விடுதியையும் பார்வையிடுகிறார். மேலும் அவரும் அங்கேயே தங்குகிறார். ஒவ்வொரு முறையும் இமயமலை செல்லும் ரஜினி, அங்கு சுமார் 15 நாட்கள் வரை தங்குவது வழக்கம். ஆனால் இம்முறை 4 நாட்கள் மட்டும் தனது பயணதிட்டத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.