போளூர் அருகே குழந்தை கடத்தும் கும்பல் எனக் கருதி பெண் அடித்துக் கொலை
திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அருகே கோயிலுக்கு வந்தவர்களை, குழந்தை கடத்தும் கும்பல் என நினைத்து கிராம மக்கள் தாக்கியதில் பெண் ஒருவர் உயிரிழந்தார். 4 பேர் பலத்த காயமடைந்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அருகே கோயிலுக்கு வந்தவர்களை, குழந்தை கடத்தும் கும்பல் என நினைத்து கிராம மக்கள் தாக்கியதில் பெண் ஒருவர் உயிரிழந்தார். 4 பேர் பலத்த காயமடைந்தனர்.
சென்னை பழைய பல்லாவரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் வெங்கடேசன் (45), ருக்குமணி (65), மலேசியாவைச் சேர்ந்தவர்கள் மோகன்குமார், சந்திரசேகரன், சென்னை மைலாப்பூர் பகுதியைச் சேர்ந்த கார் ஓட்டுநர் கஜேந்திரன் ஆகிய 5 பேரும், போளூர் வட்டம், ஜம்பங்கிபுரம் தம்புகொண்டான்பாறை அருகே உள்ள முத்துமாரியம்மன் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய காரில் சென்றனர்.
அப்போது, காரில் வந்தவர்கள் கோயிலுக்கு வழி தெரியாததால் ஜம்பங்கிபுரம் கிராமத்தில் ஒரு வீட்டின் அருகே நீலா என்பவரிடம் வழி கேட்டனர்.
அப்போது, நீலாவின் பேத்திகள் ஜனசக்தி (3), உத்திராஸ்டி (4) ஆகியோருக்கு காரில் வந்தவர்கள் சாக்லெட் கொடுத்தனர். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த நீலா, குழந்தை கடத்தும் கும்பல் என சந்தேகமடைந்து தனது மகன் சிவாவுக்கு தகவல் கொடுத்து கூச்சலிட்டார்.
இதற்கிடையே, காரில் வந்தவர்கள் கோயிலுக்குச் செல்லாமல் காரை போளூருக்கு திருப்பி ஓட்டினர். இதை அறிந்த சிவா, தனது உறவினர், நண்பர்களுக்கு குழந்தை கடத்தும் கும்பல் காரில் போளூர் நோக்கிச் செல்கிறது எனத் தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து, களியம் கிராமத்தில் காரை வழிமறித்து அதில் இருந்தவர்களை களியம் மற்றும் சுற்று வட்டாரக் கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் சரமாரியாகத் தாக்கினர். இதில் ருக்மணி சம்பவ இடத்திலே உயிரிழந்தார். வெங்கடேசன், மோகன்குமார், சந்திரசேகரன், கார் ஓட்டுநர் கஜேந்திரன் ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.
தகவல் அறிந்த போளூர் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரித்து, காயமடைந்தவர்களை மீட்டு போளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், அவர்கள் தீவிர சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இவர்களில், மிகவும் ஆபத்தான நிலையில் இருந்த கஜேந்திரன் வேலூர் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
டிஐஜி வனிதா, மாவட்ட எஸ்.பி. பொன்னி ஆகியோர் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். தாக்குதலில் ஈடுபட்ட களியம், தம்புகொண்டான்பாறை, ஜம்பங்கிபுரம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பெண்கள் உள்பட பலரை போளூர் போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து எஸ்.பி.பொன்னி கூறியதாவது: விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள். வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் இதுவரை குழந்தைகளைக் காணவில்லை என புகார் எதுவும் வரவில்லை என்றார் அவர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.