வேலூர் கோட்டையில் பீரங்கி கண்டெடுப்பு
வேலூர் கோட்டையில் குப்பை, சாணம் கொட்டுவதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் இருந்து ஆங்கிலேயர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட பீரங்கியும், 3 குண்டுகளும் கண்டெடுக்கப்பட்டன.
வேலூர் கோட்டையில் குப்பை, சாணம் கொட்டுவதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் இருந்து ஆங்கிலேயர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட பீரங்கியும், 3 குண்டுகளும் கண்டெடுக்கப்பட்டன.
வேலூர் கோட்டை 16-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும். 1806-ஆம் ஆண்டில் இக்கோட்டையில் தொடங்கிய சிப்பாய்ப் புரட்சிதான், நாட்டின் முதல் சுதந்திரப் போராட்டமாகும்.
136 ஏக்கர் பரப்பளவு கொண்ட வேலூர் கோட்டையில், ஜலகண்டேஸ்வரர் கோயில், திப்பு மஹால், ஐதர் மஹால், பாஷா மஹால், பேகம் மஹால், கண்டி மஹால் உள்ளிட்ட 7 மஹால்கள் அமைந்துள்ளன. கோட்டையைச் சுற்றி அகழியும், நீண்ட மதில்களும் உள்ளன.
இந்நிலையில், கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயில் அருகே உள்ள கோசாலை தென்னந்தோப்பில் குப்பை, சாணம் கொட்டுவதற்காக ஊழியர்கள் அருகருகே 3 பள்ளங்களை வியாழக்கிழமை தோண்டினர். அப்போது, தோண்டப்பட்ட பள்ளத்தில் ஆங்கிலேயர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட பீரங்கியும், 3 குண்டுகளும் கண்டெடுக்கப்பட்டன.
இதுகுறித்து, உடனடியாக தொல்லியல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொல்லியல் துறை அதிகாரிகள் விரைந்து வந்து பள்ளத்திலிருந்து பீரங்கி மற்றும் 3 குண்டுகளை மீட்டதுடன், தொடர்ந்து அவற்றை ஆய்வு செய்து வருகின்றனர்.
ஏற்கெனவே, கோட்டை வளாகத்திலுள்ள அருங்காட்சியகத்தில் 2 பீரங்கிகள் உள்ளன. தற்போது கண்டெடுக்கப்பட்ட பீரங்கி சிப்பாய்ப் புரட்சியின்போது பயன்படுத்தப்பட்டவையாக இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.