புயல் பாதிப்பு: தமிழக அரசு கோரும் நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும்: ராமதாஸ்
புயல் பாதிப்புக்கு தமிழக அரசு கோரும் நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.
புயல் பாதிப்புக்கு தமிழக அரசு கோரும் நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.
சேலத்தில் அவர் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது: - கஜா புயல் பாதிக்கப்பட்ட அதிராம்பட்டினம், மன்னார்குடி, அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் மீட்புப் பணிகள் தாமதமாக நடைபெற்று வருகின்றன. அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் கிடைக்கப் பெறவில்லை. மீட்புப் பணிகளை மேற்கொள்வதில் தமிழக அரசு தோல்வி அடைந்துள்ளது.
புதுக்கோட்டை கொத்தமங்கலம் பகுதியில் அமைச்சருக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களை கைது செய்தது கண்டிக்கத்தக்கது. புயலால் டெல்டா பகுதியில் ரூ.15 ஆயிரம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. தமிழக அரசு கோரும் நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும். மேலும், மத்தியக் குழுவை அனுப்பி வைக்க வேண்டும். 8 வழிச் சாலைக்கு நிலம் கையகப்படுத்தப்படுவதில் மரங்களுக்காக அறிவிக்கப்பட்ட இழப்பீட்டின் அளவு, கஜா புயலால் பாதிக்கப்பட்ட மரங்களுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும். அதன்படி, தென்னை மரத்துக்கு ரூ.50 ஆயிரமும், மாமரத்துக்கு ரூ.30 ஆயிரமும் இழப்பீடு வழங்க வேண்டும்.
மின் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும்: தமிழகத்தில் அடுத்த மே மாதம் வரை மின் தட்டுப்பாடு ஏற்படும் என்றும், அதற்கு 1,050 மெகா வாட் மின்சாரத்தை தனியாரிடம் வாங்க மின்சார ஆணையத்திடம் வாரியம் அனுமதி கோரியுள்ளது. ஒரு யூனிட் ரூ.5.40 என்பது அதிக விலை என்பதால் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளிக்கவில்லை. வெளிச் சந்தையில் சூரிய ஒளி மின்சாரம் ரூ.2.10 முதல் ரூ.2.55 என்ற விலையிலும், அனல் மின்சாரம் ரூ.3.50-க்கு கிடைக்கும்போது ரூ.5.40-க்கு மின்சாரம் வாங்கினால் பல நூறு கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்படும்.
தமிழகத்தின் மின்தேவை 15 ஆயிரம் மெகாவாட் ஆகும். தமிழகம் உற்பத்தி செய்வது 4,500 மெகாவாட் தான். ஆனால் தமிழகம் மின்மிகை மாநிலம் என்று கூறி வருகின்றனர். சுமார் 17,200 மெகாவாட் மின்திறன் கொண்ட அனல் மின் திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இதைச் செயல்படுத்த அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
முதலீட்டாளர் மாநாட்டால் பலனில்லை: ஜனவரியில் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர் மாநாட்டால் எந்த பயனும் ஏற்படபோவதில்லை. தமிழகத்தில் முதலீடு செய்ய யாரும் தயாராக இல்லை என்றார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.