FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கணேஷ் தர்ஷன்' கைவினை பொருள்கள் கண்காட்சி : அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பஞ்சலோக விநாயகர் சிலை உள்பட அனைத்து வகையான கைவினைப் பொருள்கள் இடம்பெற்றுள்ள கணேஷ் தர்ஷன்' என்ற பெயரிலான கண்காட்சி சென்னை ஆழ்வார்பேட்டையில்

30 ஜனவரி 2024, 10:12 pm IST
கணேஷ் தர்ஷன்' கைவினைப் பொருள்கள் கண்காட்சியை தொடங்கி வைத்துப் பார்வையிட்ட அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன். உடன் தென் சென்னை மக்களவை உறுப்பினர் ஜெயவர்தன்,
பகிர்:


விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பஞ்சலோக விநாயகர் சிலை உள்பட அனைத்து வகையான கைவினைப் பொருள்கள் இடம்பெற்றுள்ள கணேஷ் தர்ஷன்' என்ற பெயரிலான கண்காட்சி சென்னை ஆழ்வார்பேட்டையில் வியாழக்கிழமை தொடங்கியது. தமிழ்நாடு கைவினைப் பொருள்கள் கலைஞர்கள் நலச் சங்கத்தின் (சிருஷ்டி') சார்பில் நடைபெறவுள்ள இந்தக் கண்காட்சியை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தொடங்கி வைத்தார். 
இதில் மத்திய, மாநில அரசுகளின் விருதுகள் பெற்ற சிற்பிகள் வடிவமைத்த 22 அடி உயரமுள்ள சக்கரத்தாழ்வார், மகாமேரு, 15 அடி மற்றும் 17 அடி உயர குதிரை, 2 டன் எடை கொண்ட விநாயகர் சிலை, 70 கிலோ சொக்கத் தங்கத்தால் ஆன லட்சுமி சிலை, தஞ்சாவூர் ஓவியங்கள், மரம் மற்றும் கல்லில் செதுக்கப்பட்ட சிற்பங்கள் உள்பட பல்வேறு வகையான சிலைகள், கைவினைப் பொருள்கள் இடம்பெற்றுள்ளன. 
5 ஆண்டுகள் தயாரிக்கப்பட்ட சிலை: இதில் குறிப்பிடத்தக்க அம்சமாக, 108 கர்ணங்களுடன் சிவ தாண்ட கோலத்தில் நடராஜர் சிலை 108 விதமான பரத நாட்டிய அபிநயங்களுடன் இடம்பெற்றுள்ளது. இதை வடிவமைக்க 5 ஆண்டுகளுக்கும் மேல் ஆனதாக சிற்பிகள் தெரிவித்தனர்.
வரும் 16 -ஆம் தேதி வரை தினமும் காலை 10.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறவுள்ள இந்தக் கண்காட்சியை பொதுமக்கள் இலவசமாகப் பார்வையிடலாம். விநாயகர் சதுர்த்தியையொட்டி பொதுமக்கள் வாங்கும் கைவினைப் பொருள்கள், சிலைகளுக்கு 10 சதவீத கழிவு வழங்கப்படவுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் தென் சென்னை மக்களவை உறுப்பினர் ஜெ.ஜெயவர்தன், மயிலாப்பூர் சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.நடராஜ், விருகம்பாக்கம் சட்டப்பேரவை உறுப்பினர் விருகை என்.ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஜிஎஸ்டி: முன்னதாக, தென் மாநிலங்களின் கைவினைப் பொருள் தொழில் துறையினர் சங்கத்தின் தலைவர் பி.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியது:
கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக கைவினைப் பொருள்களுக்கு தமிழக அரசு முழு வரிவிலக்கு அளித்து ஆதரவளித்து வந்தது. ஆனால், மத்திய அரசு விதித்த ஜிஎஸ்டி காரணமாக இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ள 40 சதவீதத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு, நடுத்தர தொழிற் சாலைகள் பாதிக்கப்பட்டு ஆயிரக்கணக்கானோர் வேலையிழந்துள்ளனர். கைவினைப்பொருள்களுக்கு தற்போது 12 முதல் 18 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் இந்த வரி விதிப்பை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments