காவல்துறையும் கிரிமினல்களும் கூட்டணி அமைத்து செயல்படுகின்றனரா?: அதிர்ச்சி அடைந்த உயர் நீதிமன்றம்
தமிழகத்தில் காவல்துறையும் கிரிமினல்களும் கூட்டணி அமைத்து செயல்படுகின்றனரா?: என்று அதிர்ச்சி அடைவதாக உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் காவல்துறையும் கிரிமினல்களும் கூட்டணி அமைத்து செயல்படுகின்றனரா?: என்று அதிர்ச்சி அடைவதாக உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது. அதில் தமிழகத்தில் உள்ள கீழமை நீதிமன்றங்களில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பபடாமல் முதல் தகவல் அறிக்கை ரத்து செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதுதொடர்பாக விரிவாக பதில் அளிக்குமாறு உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளருக்கு உத்தரவிடப்பட்டிருந்தது அதன்படி விரிவான அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அந்த வழக்கானது வெள்ளியன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது முன்னரே தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையின்படி, 2009 முதல் 2014 வரை, தமிழகத்தில் உள்ள கீழமை நீதிமன்றங்களில், குற்ற வழக்குகளில் 90 நாட்களுக்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பபடாமல் முதல் தகவல் அறிக்கை ரத்து செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 2.15 லட்சம் என்பது தெரிவிக்கப்பட்டது.
பின்னர் இதுதொடர்பாக நீதிபதிகள் தெரிவித்த கருத்துக்களாவது:
நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையின் மூலம் தமிழகத்தில் காவல்துறையும் கிரிமினல்களும் கூட்டணி அமைத்து செயல்படுகின்றனரா? என்று அதிர்ச்சி ஏற்படுகிறது.
குற்ற வழக்குகளில் 90 நாட்களுக்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பபடா விட்டால், முதல் தகவல் அறிக்கை ரத்து செய்யலாம் என்ற விதிமுறையை, கீழமை நீதிமன்ற நீதிபதிகள் இயந்திரத்தனமாக பின்பற்றி நடந்து கொண்டுள்ளனரோ என்ற சந்தேகம் எழுகிறது.
எனவே என்ன காரணத்தினால் இந்த வழக்குகளில் முதல் தகவல் அறிக்கை ரத்து செய்யபட்டது என்பது குறித்தது, தமிழக உள்துறை செயலர் மற்றும் டி.ஜி.பி இருவரும் வரும் 25-ஆம் தேதி பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு தெரிவித்த நீதிபதிகள் வழக்கினை 25-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.