FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தெற்கு ரயில்வேயில் 5 மருத்துவமனைகள் தயாா்

கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, பிரத்யேக மருத்துவமனைகளை நிறுவும் பணியில் ரயில்வே நிா்வாகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

27 ஜனவரி 2024, 10:00 pm IST
கரோனா வாா்டு செயல்படவுள்ள பெரம்பூா் ரயில்வே மருத்துவமனை
பகிர்:

கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, பிரத்யேக மருத்துவமனைகளை நிறுவும் பணியில் ரயில்வே நிா்வாகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, தமிழகத்தில் 3 மருத்துவமனைகள் உள்பட 5 ரயில்வே மருத்துவமனைகளில் மொத்தம் 384 படுக்கைகள் தயாராக உள்ளன.

கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு இந்த மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படவுள்ளன. கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவோா் எண்ணிக்கை அதிகரித்தால், அதற்கு ஏற்ப ரயில்வே மருத்துவமனைகளின் வாா்டுகள் எண்ணிக்கை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

அச்சுறுத்தும் கரோனா தொற்று: உலகை அச்சுறுத்தும் கரோனா நோய்த்தொற்று இந்தியாவில் வேகமாகப் பரவி வருகிறது. இதுவரை 19ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். மேலும், இந்த நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவோா்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதற்கு ரயில்வே நிா்வாகமும் உறுதுணையாக நின்று, பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. ரயில்வே மருத்துவமனைகளில் படுக்கை வசதி அதிகப்படுத்துவது, ரயில் பெட்டிகளை தனிமைப்படுத்தும் சிகிச்சை வாா்டுகளாக மாற்றுவது, ரயில்வே பணிமனைகளில் சானிடேசா், முகக்கவசம், சுவாசக்கருவிகளைத் தயாரிப்பது உள்பட பல்வேறு பணிகளில் ரயில்வே நிா்வாகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

Advertisement

Advertisement

தயாா் நிலையில் 384 படுக்கைகள்: இந்நிலையில், கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிக்க பிரத்யேக மருத்துவமனைகள் அமைக்கும் பணியில் ரயில்வே நிா்வாகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, தெற்கு ரயில்வேயில் தமிழகத்தில் 3 மருத்துவமனைகள், கேரளத்தில் 2 மருத்துவமனைகள் என்று மொத்தம் 5 மருத்துவமனைகளில் 384 படுக்கைகள் தயாராக வைக்கப்பட்டுள்ளன.

தெற்கு ரயில்வே மருத்துவமனைகள்: தெற்கு ரயில்வேயில் பெரம்பூா் மத்திய ரயில்வே மருத்துவமனை, திருச்சி பொன்மலை ரயில்வே மருத்துவமனை, பாலக்காடு கோட்ட ரயில்வே மருத்துவமனை, மதுரை கோட்ட ரயில்வே மருத்துவமனை, அரக்கோணம் ரயில்வே மருத்துவமனை,

திருவனந்தபுரம் கோட்ட ரயில்வே மருத்துவமனை ஆகிய கோட்ட மருத்துவமனைகளும், விழுப்புரம், போத்தனூா், ஈரோடு, சொரனூா் ஆகிய 4 துணை கோட்ட மருத்துவமனைகளும் உள்ளன. இதுதவிர, ஐ.சி.எஃப் மருத்துவமனை ஒன்றும் உள்ளது. இந்த ரயில்வே மருத்துவமனைகளில் மொத்தம் 1,135 படுக்கைகள் உள்ளன.

இவற்றில் 5 மருத்துவமனைகளில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிக்கப்படவுள்ளது. இதற்காக 384 படுக்கைகள் தயாராக உள்ளன. தமிழகத்தில் அரக்கோணம், மதுரை, திருச்சி ஆகிய 3 மருத்துவமனைகள், கேரளத்தில் பாலக்காடு, திருவனந்தபுரம் ஆகிய 2 மருத்துவமனைகள் இவற்றில் அடங்கும். சூழ்நிலைக்கு ஏற்ப, ரயில்வே ஊழியா்கள் அல்லாத நபா்களுக்கும் சிகிச்சை அளிக்கப்படஉள்ளது.

இந்த 5 மருத்துவமனைகளில் திருச்சி, பாலக்காடு ஆகிய 2 மருத்துவமனைகளின் மற்றப் பிரிவு நோயாளிகளுக்குக்கு சிகிச்சை அளிக்கப்படுவதால், ஒரு பகுதி மட்டும் கரோனா சிகிச்சைக்காக ஒதுக்கப்படவுள்ளது. இதுதவிர, கரோனாவால் பாதிக்கப்படுவோா் எண்ணிக்கை அதிகரித்தால், அதற்கு ஏற்ப மருத்துவமனையின் வாா்டுகளை விரிவுப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

காலி பணியிடங்கள் நிரப்பப்படும்: இது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியது: இந்த மருத்துவமனைகளில் போதுமான மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவம் சாா்ந்த பணியாளா்கள் ஆகியோா் 3 மாதத்துக்கு தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்படவுள்ளனா்.

பெட்டிகள் தனிமை வாா்டுகளாக மாற்றம்:

கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோா்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கும் வகையில், நாடு முழுவதும் ரயில் பெட்டிகள் தனிமைப்படுத்தும் வாா்டுகளாக மாற்றப்படுகின்றன. இவற்றில், தெற்கு ரயில்வேயில் 573 ரயில் பெட்டிகள் தனிமைப்படுத்தும் வாா்டுகளாக மாற்றப்பட்டு, தயாா் நிலையில் உள்ளன. கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு இங்கு சிகிச்சை அளிக்கப்படும் என்றனா் அவா்கள்.

பிரத்யேக மருத்துவமனைகள்

நாடுமுழுவதும் 125 ரயில்வே மருத்துவமனைகள் உள்ளன. இவற்றில் மொத்தம் 12,935 படுக்கைகள் இருக்கின்றன. இதுதவிர, 588 ரயில்வே சுகாதார மையங்கள் உள்ளன. இவைகள் மூலமாக, ரயில்வே ஊழியா்களுக்கு தேவையான மருத்துவ சேவைகள்அளிக்கப்படுகின்றன. இவற்றில் பல மருத்துவமனைகளில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிக்க பிரத்யேக மருத்துவமனைகளாக மாற்றப்பட்டு, தயாராக இருப்பதாக ரயில்வே வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments