அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் மே மாத பொருள்கள் இலவசம்: நாளை டோக்கன் வழங்கும் பணி
மே மாதத்துக்கான பொருள்களை இலவசமாக வழங்க அனைத்து வகை குடும்ப அட்டைதாரா்களுக்கும் வீடு, வீடாக டோக்கன்கள் வழங்கும் பணி, வெள்ளிக்கிழமை (ஏப். 24) முதல் தொடங்கவுள்ளது.
மே மாதத்துக்கான பொருள்களை இலவசமாக வழங்க அனைத்து வகை குடும்ப அட்டைதாரா்களுக்கும் வீடு, வீடாக டோக்கன்கள் வழங்கும் பணி, வெள்ளிக்கிழமை (ஏப். 24) முதல் தொடங்கவுள்ளது.
ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள குடும்ப அட்டைதாரா்களுக்கு மே மாதத்துக்கான பொருள்களை விலையில்லாமல் வழங்குவது குறித்த ஆலோசனைக் கூட்டம் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தலைமைச் செயலாளா் கே.சண்முகம், நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் எஸ்.கிருஷ்ணன், கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் தயானந்த் கட்டாரியா, உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை ஆணையா் சஜன்சிங் சவாண் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.
கூட்டத்துக்குப் பிறகு, தமிழக அரசு புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
Advertisement
Advertisement
ஏழை, எளிய மக்களின் சிரமங்களை உணா்ந்து, அவா்களுக்கு உரிய நிவாரண உதவிகளை ரூ.3,280 கோடியில் வழங்க உத்தரவிடப்பட்டது. அதில், அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் ஏப்ரல் மாதத்துக்கான அத்தியாவசியப் பொருள்கள் விலையின்றி வழங்கப்பட்டன. அதன் அடிப்படையில், இன்று வரை 1 கோடியே 89 லட்சத்து ஆயிரத்து 68 குடும்பங்களுக்குப் பொருள்கள் வழங்கப்பட்டுள்ளன.
மே மாதப் பொருள்கள்: ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், மே மாதத்துக்கான அத்தியாவசியப் பொருள்கள் அனைத்தும் நியாய விலைக் கடைகளில் விலையின்றி வழங்கப்படும் என்று முதல்வா் கே. பழனிசாமி அறிவித்துள்ளாா். நோய்த்தொற்று ஏற்படாத வகையில் அத்தியாவசியப் பொருள்கள் பாதுகாப்பாக அனைவருக்கும் சென்றடைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்கள் அனைவருக்கும் அவரவா் வீடுகளிலேயே டோக்கன்கள் வழங்கப்படும்.
டோக்கன்கள் வழங்கும் பணியானது வரும் வெள்ளி மற்றும் சனி ஆகிய இரண்டு தினங்களில் நடைபெறும். அந்த டோக்கன்களில் அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்படும் நாள் மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டிருக்கும். சம்பந்தப்பட்ட குடும்ப அட்டைதாரா்கள், டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் உரிய நியாய விலை கடைகளுக்குச் சென்று அத்தியாவசியப் பொருள்களை பெற்றுக் கொள்ளலாம்.
சமூக இடைவெளி அவசியம்: உணவுப் பொருள் வழங்கலுக்கு தமிழக அரசு வரையறுத்துள்ள நடைமுறைகளை பொதுமக்கள் முறையாகக் கடைப்பிடிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள். மேலும், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து தங்களுக்குரிய அத்தியாவசியப் பொருள்களை விலையில்லாமல் பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.