முகப்பு
தமிழ்நாடு

ஏர்வாடியில் ஆபாசப் படம் பிடித்து பணம் கேட்டு மிரட்டிய கும்பலில் 2 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் கணவரால் கைவிடப்பட்ட பெண்ணை ஆபாசமாகப் படம் பிடித்து மிரட்டி பணம் கேட்ட கும்பலைச் சேர்ந்த 2 பேரை காவல்துறையினர் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்துள்ளனர்.

Updated On : 6 ஜூலை 2020, 1:36 pm IST
ஆபாசப் படம் பிடித்து பணம் கேட்டு மிரட்டிய கும்பலில் ஒருவர்
பகிர்:

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் கணவரால் கைவிடப்பட்ட பெண்ணை ஆபாசமாகப் படம் பிடித்து மிரட்டி பணம் கேட்ட கும்பலைச் சேர்ந்த 2 பேரை காவல்துறையினர் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.வருண்குமார் அலுவலகத் தரப்பில் திங்கள்கிழமை கூறியிருப்பதாவது..

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சேர்ந்தவர் ஜெர்மனியில் பொறியியல் பட்டம் படித்துவருகிறார். அவர் கீழக்கரையில் உள்ள பெண்களிடம் இணையம் மூலம் தொடர்புகொண்டு பழகியதுடன், அவர்களை புகைப்படம் எடுத்து மார்பிங் மூலம் ஆபாசமாக சித்தரித்து இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி பணம் பறித்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, அவரது நண்பர் பார்டு பாசில், ஜாசம்கனி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

Advertisement

Advertisement

கீழக்கரைச் சம்பவத்தைத் தொடர்ந்து ஏர்வாடியைச் சேர்ந்த கணவரால் கைவிடப்பட்ட பெண் ஒருவரும் காவல் கண்காணிப்பாளரின் சிறப்பு குறைதீர்க்கும் பிரிவு செல்லிடப் பேசி மூலம் ஞாயிற்றுக்கிழமை புகார் அளித்துள்ளார். அதன்படி கீழக்கரையில் செல்லிடப் பேசி ரீஜார்ஜ் மற்றும் மின்கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட கட்டண சேவை கணினி கடையில் பணிபுரியும் சகாபுதீன் தன்னுடன் நெருங்கிப்பழகி திருமணம் செய்வதாகக் கூறியுள்ளார். அத்துடன் தன்னை ஆபாசமாகப் படம் பிடித்துள்ளார்.

கடையின் உரிமையாளர் பாதுஷா மற்றும் ஹாஜி ஆகியோரிடம் ரூ.10 லட்சம் கடன் பெற்றுள்ளதாக க கூறிய சகாபுதீன் அதை அடைக்க உதவுமாறு பெண்ணிடம் கேட்டுள்ளார். பணம் தரவில்லை எனில் ஆபாச படத்தை சமூக வலைத்தளங்களில் பரப்பிவிடுவதாக மிரட்டிய சகாபுதீன், சில படங்களைக் கடை உரிமையாளர் மூலம் வெளிநாட்டில் உள்ள ஆலிம் என்பவருக்கு அனுப்பியுள்ளனர். அவர் மூலம் சமூகவலைதளங்களில் சம்பந்தப்பட்ட பெண்ணின் ஆபாசப்படத்தைப் பரப்பியதாகக் கூறப்படுகிறது.

பெண் அளித்த புகார் அடிப்படையில் கீழக்கரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதியப்பட்டுள்ளது. மேலும் காவல் ஆய்வாளர் யமுனா விசாரணை மேற்கொண்டார். அப்போது பெண் புகாரில் குறிப்பிட்ட சகாபுதீன் பணிபுரிந்த கணினி கடையில் லாட்டரி விற்பனை, சூதாட்டம் போன்ற சட்டவிரோத செயல்கள் நடந்திருப்பதும் தெரியவந்துள்ளது. விசாரணையில் சகாபுதீன் உள்ளிட்டோர் ஏர்வாடி பகுதியில் கணவர் வெளிநாடு சென்ற பெண்களையும், கணவரால் கைவிடப்பட்ட மற்றும் கணவர் இல்லாத பெண்களையும் குறிவைத்துப் பழகி அவர்களது புகைப்படத்தை மார்பிங் செய்தும்,
ஆபாசப் படம் பிடித்தும் மிரட்டிப் பணம் பறித்திருப்பது தெரியவந்துள்ளது. 

அதனடிப்படையில் தற்போது ஏர்வாடியைச் சேர்ந்த செய்யது அபுபக்கர்பாதுஷா (35) மற்றும் செய்யது சகாபுதீன் என்ற அந்துல் (35) ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து கணினி, 4 செல்லிடப் பேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. அவற்றில் உள்ள புகைப்படம் உள்ளிட்டவற்றை அறிய தடய அறிவியல் சோதனைக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் மேலும், 4 பேர் தேடப்பட்டுவருகின்றனர். 

கோரிக்கை ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆண்களால் பாலியல் தொந்தரவு மற்றும் மிரட்டிப் பணம் பறித்தல் ஆகிய பிரச்னையில் பாதிக்கப்பட்ட பெண்கள் காவல் கண்காணிப்பாளரின் சிறப்பு குறைதீர் பிரிவின் செல்லிடப் பேசியான 9489919722 என்ற எண்ணில் தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம் எனவும் காவல் உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments