5.8.1976: பயிரைக் காக்க நீர்: கர்நாடகா - த.நா. உடன்பாடு
அரை நூற்றாண்டுக்கு முன், தினமணி நாளிதழில் இன்றைய நாளில் வெளியான முக்கிய செய்தி.
பெங்களூர், ஆக. 4 - கர்நாடகத்திலும் தமிழகத்திலும் நெற்பயிரைக் காப்பாற்றுவதற்காக, "பரஸ்பரம் திருப்திகரமான ஏற்பாடுகளை" வகுக்க இரு ராஜ்யங்களும் இன்று ஒப்புக்கொண்டன.
இந்த நோக்கம் கைகூடச் செய்வதற்கான வழி வகைகளை வகுக்க இரு ராஜ்யங்களையும் சேர்ந்த தொழில்நுட்ப அதிகாரிகள் அடிக்கடி சந்தித்துப் பேசுவார்கள்.
தமிழ் நாடு கவர்னரின் ஆலோசகர் சுப்ரமணியம், மற்றும் அவருடன் வந்த அதிகாரிகளும், கர்நாடக முதன் மந்திரி தேவராஜ் அர்ஸ், மற்றும் கர்நாடக ராஜ்ய அதிகாரிகள் ஆகியோரைச் சந்தித்து பேசிய கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
Advertisement
Advertisement
காவிரி நீர்ப் பகுதியின் தண்ணீர் தேவையைப் பற்றி இக்கூட்டம் விவாதித்தது என்று சர்க்கார் பேச்சாளர் ஒருவர் நிருபர்களிடம் கூறினார். நடப்பு ஆண்டில் கர்நாடகத்தில் காவிரி நதியின் நீர்ப் பிடிப்பு பகுதியில் மழை "மிகவும் குறைவாக" இருந்திருப்பது சுட்டிக் காட்டப்பட்டது.
குடகில் உள்ள மெர்க்காரா பகுதியின் சராசரியாக வருஷாந்திர மழை அளவு 1800 மி.மீ. ஆனால் இந்த வருஷம் பெய்திருப்பது 1050 மி.மீதான். காவிரியில் நீர்வரத்து குறைவாயிருப்பதற்கு இதுதான் பிரதான காரணம். கர்நாடகத்திலும் சரி, தமிழ் நாட்டிலும் சரி இது சிரமங்களை ஏற்படுத்தியிருக்கிறது.
காவிரியில் நீர் இல்லாத காரணத்தால், மண்டயம் ஜில்லாவில் நெற் பயிருக்கும், கரும்பு பயிருக்கும் சேதமேற்பட்டிருப்பதை அவர் சுட்டிக் காட்டினார்.
அவர் மேலும் கூறியதாவது:-
தமிழ் நாட்டில் காவிரி நீர்ப் பகுதியில் குறுவை, சம்பா சாகுபடியிலுள்ள நிலம் 12.5 லட்சம் ஏக்கராகும். இந்த பயிர்களுக்கு பாதகம் ஏற்படாதபடி பார்த்துக் கொள்வதற்கான பல்வேறு சாத்தியக் கூறுகள் பற்றி பரிசீலிக்கப்பட்டது. வரப்போகும் மாதங்களில் பெய்யவிருக்கும் மழை, குறிப்பாக வட கிழக்கு பருவ மழை கவனத்தில் கொள்ளப்பட்டது. காவிரி டெல்டாவில் அக்டோபரிலிருந்து டிசம்பர் வரை நல்ல மழை பெய்வதுதான் பொதுவான அனுபவமாயிருந்து வந்திருக்கிறது.
இரு ராஜ்யங்களிலும் உணவு உற்பத்தியை அதிகபட்ச அளவுக்குக் காப்பாற்றுவதற்காக சாத்தியமான நடவடிக்கைகள் அனைத்தையும் எடுத்தாக வேண்டும் என்று முதன் மந்திரி கருதுகிறார். இது கைகூடுவதற்காக, இரு ராஜ்யங்களையும் சேர்ந்த தொழில் நுட்ப அதிகாரிகள் அடிக்கடி தொடர்புகொண்டு, அவசியமான வழிவகைகளை வகுக்க வேண்டும் என்று இக்கூட்டம் ஒப்புகொண்டது.
அடுத்த டிசம்பர் வரையுள்ள நிலையைக் கவனிக்க வேண்டும் என்று ஒப்புக் கொள்ளப்பட்டது. இரு ராஜ்யங்களுக்கும் பரஸ்பர நன்மையாயிருக்கக் கூடிய ஏற்பாடுகள் வகுக்கப்படும்.
சேதாரத்தை தவிர்ப்பதன் மூலம் தண்ணீர் மிகவும் செட்டாகப் பயன்படுத்துவதற்கான நடவடிக்கை எடுத்துக் கொள்ளுமாறு தமிழ் நாடு அதிகாரிகளை கர்நாடகா அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர் என்றார் சர்க்கார் பேச்சாளர். ...
சூடான் அதிபருக்கு எதிராக சதி செய்ததாக 81 பேர் தூக்கிலிடப்பட்டனர்
லண்டன், ஆக. 4 - கடந்த மாதம் சூடான் அதிபர் நிமெய்ரிக்கு எதிராக நடந்த புரட்சி சதியில் கலந்து கொண்டதாக மொத்தம் 81 பேருக்கு இன்று அதிகாலை மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
5.8.1976: Water to save crops: Karnataka-Tamil Nadu agreement.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.