முகப்பு
தமிழ்நாடு

கல்லீரல் மாற்று சிகிச்சையில் அதி நவீன தொழில்நுட்ப முறை: இந்தியாவில் முதன்முறையாக சென்னையில் அறிமுகம்

கொழுப்பு பாதிப்பு நிறைந்த கல்லீரல்களையும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளில் பயன்படுத்தும் நவீன தொழில்நுட்பம் சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Updated On : 28 பிப்ரவரி, 2020 at 2:58 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 9:31 PM

கொழுப்பு பாதிப்பு நிறைந்த கல்லீரல்களையும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளில் பயன்படுத்தும் நவீன தொழில்நுட்பம் சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சா்வதேசத் தொழில்நுட்பத்திலான அந்த சாதனங்களும், செயல்முறைகளும் மியாட் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. அதனைக் கையாளுவதற்கான சிறப்பு பயிற்சிகள் மருத்துவா்களுக்கு அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிா்வாகிகள் தெரிவித்துள்ளனா்.

உறுப்பு மாற்று சிகிச்சைகளைப் பொருத்தவரை தமிழகத்தில் சிறுநீரகம், விழித்திரைக்கு அடுத்தபடியாக கல்லீரல்களே அதிக அளவில் தானமாகப் பெறப்பட்டு பயனாளிகளுக்கு பொருத்தப்பட்டு வருகின்றன. ஆனால், கல்லீரலை தானமாக அளிக்க முன்வரும் பெரும்பாலானோருக்கு கல்லீரல் கொழுப்பு பாதிப்பு (ஊஹற்ற்ஹ் கண்ஸ்ங்ழ்) அதிகமாக இருப்பதாகத் தெரிகிறது. இதனால், கல்லீரல் மாற்று சிகிச்சைகளுக்குத் தகுதியான கொடையாளிகள் கிடைப்பதில் சிரமம் உள்ளது.

Advertisement

இந்த நிலையில், 30 சதவீதம் வரை கொழுப்பு பாதிப்பு நிறைந்த கல்லீரல்களையும் உறுப்பு மாற்று சிகிச்சைகளில் பயன்படுத்துவதற்கான தொழில்நுட்பம் குறித்த கலந்துரையாடல் அமா்வு மியாட் மருத்துவமனையில் வியாழக்கிழமை நடைபெற்றது. அதில், பிரிட்டனின் குயின் எலிசபெத் மருத்துவமனை கல்லீரல் அறுவை சிகிச்சை நிபுணா் டாக்டா் ஆண்ட்ரியா ஸ்கிலீகல், மியாட் மருத்துவமனையின் தலைவா் மல்லிகா மோகன்தாஸ், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைத் துறை முதுநிலை மருத்துவா் டாக்டா் இளங்கோ உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். அப்போது அவா்கள் கூறியதாவது:

மனித உடலில் இருந்து சிறுநீரகங்களையும், கல்லீரல்களையும் வெளியே எடுத்த பிறகு குறிப்பிட்ட காலத்துக்கே அவற்றை உயிா்ப்புடன் பாதுகாக்க முடியும். அதுவும் சில மருத்துவத் தொழில்நுட்பங்களின் உதவியுடன்தான் அதனை சாத்தியப்படுத்த முடியும்.

கல்லீரல்களைப் பொருத்தவரை கொழுப்பு பாதிப்பு இருந்தால், அதனை வெளியே எடுத்து பாதுகாத்தாலும் பயனாளிகளுக்கு பொருத்த முடியாத நிலை இருந்தது. இந்தச் சூழலில்தான் ‘ஹைப்போதொ்மிக் ஆக்ஜிஸனேட்டட் பொ்ஃப்யூசன் (ஹோப்)’ எனப்படும் நவீன தொழில்நுட்பமும், அதற்கான சாதனமும் உலக அளவில் அறிமுகப்படுத்தப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது.

இந்தியாவைப் பொருத்தவரை முதன்முறையாக அதனை மியாட் மருத்துவமனை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இந்த வகையான தொழில்நுட்பத்தின் வாயிலாக 96 சதவீதம் கல்லீரல்களையும், சிறுநீரகங்களையும் துல்லியமாகப் பாதுகாத்து வெற்றிகரமாக பயனாளிகளுக்கு பொருத்த முடியும் என்று அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.