ஆலங்குளத்தில் மணல் லாரி மோதியதில் வியாபாரி உடல் நசுங்கி உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆலங்குளம் அருகே உள்ள கழுநீர் குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் பிச்சைக்கனி (62). இவர் அந்த கிராமத்தில் சிறிய அளவில் பெட்டிக்கடை வைத்து வியாபாரம் செய்து வந்தார். ஆலங்குளத்தில் கடைக்குத் தேவையான பொருள்களை வாங்கிய பின்னர் தனது மொபெட்டில் கழநீர்குளம் சென்றார்.
அப்போது எதிரே வந்த மணல் லாரி ஒன்று பிச்சைக்கனி மீது மோதி அவரை சிறிது தூரம் இழுத்துச் சென்றது. இதில் அவர் உடல் நசுங்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர் லாரியை நிறுத்திவிட்டுத் தப்பி ஓடி விட்டார். தகவல் அறிந்து வந்த ஆலங்குளம் காவல்துறை சடலத்தை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப் பதிந்து லாரியை பறிமுதல் செய்து தப்பி ஓடிய லாரி ஓட்டுநரைத் தேடி வருகின்றனர்.