கல்பாக்கம் அருகில் கடலில் மூழ்கி உயிரிழந்தால் மாணவனின் உடலை வாங்க மறுத்து பெற்றோர்கள் திங்கள் கிழமை செங்கல்பட்டு அரசு மருத்துவமனை எதிரில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் அடுத்த நெரும்பூர் பகுதியைச் சேர்ந்தவர் பார்த்தசாரதி. இவரது மகன் மோகன்(15). இவர் அதே பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமையன்று நெரும்பூர் பகுதியைச் சேர்ந்த 15-க்கும் மேற்பட்ட மாணவர்களை அப்பள்ளியைச் சேர்ந்த ஆங்கில ஆசிரியர் ஞானசேகரன் அனுபுரத்தில் நடைபெற்ற கிரிக்கெட் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்வதற்காக அழைத்துச் சென்றுள்ளார்.
பின்னர், போட்டி முடிந்தவுடன் மாணவர்களை ஆசிரியர் ஞானசேகரன் கல்பாக்கம் பேருந்து நிலையத்தில் பத்திரமாகச் செல்லும்படி விட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது. ஆசிரியர் சென்றதைத் தொடர்ந்து அடுத்தபேருந்து நிறுத்தத்தில் இறங்கிய மாணவர்கள் வீட்டிற்குச் செல்லாமல் கல்பாக்கம் கடலில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக மோகன் அலையில் சிக்கி கடலில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார். சனிக்கிழமை மாலை பெற்றோர் மகனைக் காணவில்லை எனப் புகார் அளித்ததையடுத்து காவல்துறை மீனவர்களைக் கொண்டு கடலில் தேடிவந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை மாணவன் இறந்த நிலையில் மீட்கப்பட்டார். இதையடுத்து உடலை மீட்ட போலீசார் பிரேதப் பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து கல்பாக்கம் ஆய்வாளர் கூறுகையில்,
இதனிடையே செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு வந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் மோகனின் உயிரிழப்பிற்கு காரணமான ஆசிரியர் ஞானசேகரன் கைது செய்யக்கோரியும், இழப்பீடு வழங்கக் கோரியும் உடலை வாங்க மறுத்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனை எதிரே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செங்கல்பட்டு - திண்டிவனம் சாலையில் நடைபெற்ற போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் டிஎஸ்பி பாரத், இன்ஸ்பெக்டர்கள் வெங்கடேசன், ரவிக்குமார், வடிவேல் முருகன் அசோகன் சத்தியவாணி உள்ளிட்ட போலீசார் வார்த்தை நடத்திக் கூட்டத்தைக் கலைத்தனர்.
ஆனால் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்தனர். இதனையடுத்து பிற்பகல் மாவட்ட வருவாய் அலுவலர் மேனுவல்ராஜ், தலைமையில் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சுந்தரம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் இப்ராஹிம், வட்டாட்சியர் எஸ்.நடராஜன் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை மேற்கொள்வதாகவும் இறந்த மாணவர் குடும்பத்திற்கு அரசாங்க ரீதியாக செய்யவேண்டி உதவிகளை செய்து தருவதாகவும் உறுதியளித்ததை அடுத்து கலைந்து சென்றனர். இதனால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.