விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு கட்டுப்பாடுகள் விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி இன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகின்றது. பொதுமக்கள் அதிகம் கூடும் முக்கிய பகுதிகளில், வீடுகளிலும் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பொது இடங்களிலும், வீடுகளிலும் வைத்து வழிபடும் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்வதற்கு உயர்நீதிமன்றம் மதுரை கிளை கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.
- விநாயகர் ஊர்வலத்தில் பங்கேற்பவர்கள் குட்கா, மதுபானங்கள் போன்ற போதைப் பொருள்களை உட்கொள்ளக்கூடாது.
- விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது, ஆடல் பாடல் நிகழ்ச்சியில் ஆபாச நடனமோ, அநாகரிகமான உரையாடல்களோ இருக்கக் கூடாது.
- அரசியல் கட்சி அல்லது மதம், சமூகம், சாதிகள் குறிப்பிடும் விதத்தில் பாடல்களோ, நடனமோ இருக்கக் கூடாது.
- அரசியல் கட்சிகள் மற்றும் மதத்துக்கு ஆதரவாகவோ, எதிராகவோ பேனர்கள் வைக்கக் கூடாது.
- ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்தால் அதற்கு விழா ஏற்பாட்டாளர்களும், வழக்குத் தாக்கல் செய்தவர்களுமே பொறுப்பாகும்.
- நீதிமன்ற கட்டுப்பாடுகளை ஒன்றை மீறினாலும், நிகழ்ச்சியை நிறுத்தி காவல்துறை நடவடிக்கை எடுக்கலாம்.