உசிலம்பட்டி அருகே கோவில் உண்டியலை திருடிச் செல்லும் போது கோவில் சுற்றுச்சுவரில் மாட்டிக் கொண்டதால், உண்டியலை அங்கேயே விட்டு தப்பிச் சென்ற கொள்ளையனை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் காவல் துறையினர் மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பெருங்காமநல்லூரில் அமைந்துள்ளது, பிரசித்தி பெற்ற பெத்தனசாமி திருக்கோவில். இந்த கோவிலுக்குள் நேற்று இரவு புகுந்த மர்ம நபர் கோவில் வளாகத்தில் சாதாரணமாக உலா வந்து, சாமியின் கண் மலர், அம்மனின் சூலாயுதம் மற்றும் ஆபரணங்களைக் கொள்ளையடித்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், கோவிலில் இருந்த உண்டியலை தூக்கி செல்லும் போது சுற்றுச்சுவரில் மாட்டிக் கொள்ளவே அங்கேயே உண்டியலை விட்டு விட்டு தப்பி சென்றதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக கோவில் நிர்வாகி ராஜசேகர் அளித்த புகாரின் அடிப்படையில் சேடபட்டி காவல் நிலைய போலீசார் கோவிலில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது சாதாரணமாக கோவிலுக்குள் மர்ம நபர் உலா வந்து கொள்ளையடிப்பதும், உண்டியல் இருந்த பகுதியில் அமைந்துள்ள சிசிடிவி கேமராவைக் கண்டதும், கட்டைப் பையை தலையில் மாட்டிக் கொண்டு உண்டியலை திருடி செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளன.
காவல் துறையினர் இந்த சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக கொண்டு கொள்ளையடித்த மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.