முகப்பு
தமிழ்நாடு

காரைக்காலில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு காலரா: அவசரநிலை அறிவிப்பு

காரைக்காலில் 1000-க்கும் மேற்பட்டோருக்கு காலரா தொற்று எதிரொலியாக அங்கு மாவட்டம் முழுவதும் பொது சுகாதார அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

Updated On : 3 ஜூலை 2022, 1:24 pm IST
பகிர்:

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் 1000-க்கும் மேற்பட்டோருக்கு காலரா தொற்று எதிரொலியாக அங்கு மாவட்டம் முழுவதும் பொது சுகாதார அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வாந்தி, வயிற்றுப்போக்கு அதிகரித்து வந்தது. இதனைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்த நிலையில், புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் ஸ்ரீ ராமுலு இன்று 2-ம் முறையாக காரைக்காலில் மருத்துவ குழுவினருடன் ஆய்வு செய்தார்.

இதுவரை 1000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. பின்னர் அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

Advertisement

Advertisement

காரைக்கால் மாவட்டத்தில் சமீபகாலமாக கடுமையான வயிற்றுப்போக்கு நோய்தொற்று அதிகளவில் பதிவாகி வருகின்றன. மேலும் பரிசோதிக்கப்பட்ட பெரும்பாலான தண்ணீர் மாதிரிகள் திருப்திகரமாக இல்லை. சில நோயாளிகளுக்கு காலரா தொற்று உறுதியாகியுள்ளது.

மேலும், தினசரி மருத்துவமனைக்கு வயிற்றுப்போக்குடன் வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இவற்றைக் கருத்தில் கொண்டு, சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை இயக்குனரகம் காரைக்கால் மாவட்டத்தை பொது சுகாதார அவசர நிலையாக பிரகடனப்படுத்தி அறிவித்துள்ளது.

புதுச்சேரியைச் சேர்ந்த சுகாதாரக் குழுவின் ஒருங்கிணைப்புடனும், நகராட்சி, பொதுப்பணித்துறை போன்ற துறைகளின் ஒருங்கிணைப்புடனும் அனைத்து மறுசீரமைப்பு மற்றும் மேலாண்மை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. 

பொதுமக்கள் விழிப்புடன் இருப்பதுடன், கொதிக்கவைத்த தண்ணீரை (20 நிமிடங்கள் கொதிக்கவைத்து ஆறியப்பிறகு) குடிக்கவும். சாப்பிடும் முன், கை கழுவுதல் மற்றும் தனிப்பட்ட சுகாதார நடவடிக்கைகளை உறுதிப்படுத்தவும். சரியாகக் கழுவி சமைத்த உணவை உட்கொள்ளவும். பாதுகாப்பான கழிப்பிட வசதிகளைப் பயன்படுத்தவும். திறந்த வெளியில் மலம் கழிப்பதைத் தவிர்க்கவும். வயிற்றுப்போக்கு அதிகமாக இருந்தால் அல்லது வாந்தி எடுத்தால் உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டுகிறோம்.

ஓ.ஆர்.எஸ். கரைசலின் முக்கியத்துவம் குறித்து அறிந்து, வீட்டிலேயே ஓ.ஆர்.எஸ். தீர்வை உருவாக்க கற்றுக்கொள்ளுங்கள். இது நோயின் தீவிரத்தை தடுக்க உதவும் (உள்ளூர் நல்வழித்துறை குழு மற்றும் சுகாதார குழு உதவும்). அக்கம்பக்கத்தினர், மூத்த குடிமக்கள் யாராவது நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு தகவல் தெரிவிக்கவும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments