முகப்பு
தமிழ்நாடு

அதிமுகவில் இணைகிறார் திவாகரன்!

சசிகலா, தினகரனுடன் ஏற்பட்ட மோதலால் அண்ணா திராவிடர் கழகம் என்ற தனிக்கட்சி தொடங்கிய சசிகலாவின் சகோதரர் திவாகரன் அதிமுகவில் இணைவதாக சசிகலா தரப்பில் அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

Updated On : 10 ஜூலை, 2022 at 9:08 PM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:15 PM


சசிகலா, தினகரனுடன் ஏற்பட்ட மோதலால் அண்ணா திராவிடர் கழகம் என்ற தனிக்கட்சி தொடங்கிய சசிகலாவின் சகோதரர் திவாகரன் அதிமுகவில் இணைவதாக சசிகலா தரப்பில் அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் சசிகலா அதிமுகவின் பொதுச்செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார். அதனை அதிமுகவின் தற்போதைய ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கலகத்தில் ஈடுபட்டார்.  இதையடுத்து எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கினார் சசிகலா.

பின்னர் சொத்துக்குவிப்பு வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பால் பெங்களூகு சிறை சென்றார் சசிகலா. 

Advertisement

இதையடுத்து கட்சியையும், ஆட்சியையும் தனவசப்படுத்திக் கொள்ளும் திட்டத்தில் ஈடுபட்ட எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி மீண்டும் கட்சியில் இணைத்துக்கொண்டனர். பன்னீர்செல்வத்துக்கு ஆட்சியில் துணை முதல்வர் பதவியும், கட்சியில் ஒருங்கிணைப்பாளர் பதவியும் அளிக்கப்பட்டது.  

அதன்பிறகு சசிகலா, தினகரன்  அதிமுகவில் இருந்து நீக்கப்படுவதாக ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் அறிவித்தனர். 

இதனிடையே, தினகரன் புதிய கட்சி தொடங்கினார். தினகரனுடன் ஏற்பட்ட மோதலால் அண்ணா திராவிடர் கழகம் என்ற தனிக்கட்சியைத் தொடங்கினார் சசிகலாவின் சகோதரர் திவாகரன். 

அதிமுகவில் இருந்து சசிகலா நீக்கப்பட்டாலும் தான் தொடர்ந்து அதிமுகவின் பொதுச்செயலாளராக நீடித்து வருவதாக சசிகலா தெரிவித்து வருகிறார். 

இந்நிலையில், ஆட்சி அதிகாரம் பறிபோன நிலையில், அதிமுகவில் இபிஎஸ், ஓபிஎஸ் இடையே மோதல் நிலவி வருகிறது. 

இந்நிலையில், சசிகலா சுற்றுப்பயணம் சென்றுவரும் இடங்களில் எல்லாம் அவரது ஆதரவாளர்கள் அதிமுகவுக்கு சசிகலா தலைமையேற்க வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பி வருகின்றனர். 

இந்த நிலையில், சசிகலா தலைமையிலான அதிமுகவுடன் அவருடைய சகோதரர் திவாகரன் தன்னுடைய அண்ணா திராவிடர் கழகத்தை இணைக்க இருப்பதாக சசிகலா தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

தஞ்சாவூரில் உள்ள தமிழரசி திருமண மண்டபத்தில் நாளை மறுநாள் செவ்வாய்க்கிழமை (ஜூலை 12) காலை 11 மணிக்கு இரு கட்சிகளின் இணைப்பு விழா நடைபெற உள்ளதாக சசிகலா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில், கழக நிர்வாகிகள், கழக முன்னோடிகள், கழகத் தொண்டர்கள் மற்றும் பொது மக்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.