முகப்பு
தமிழ்நாடு

'பேரறிவாளன் ஒன்றும் நிரபராதி இல்லை' - திமுக அரசை சாடிய அண்ணாமலை

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 பேருமே குற்றவாளிகள்தான், அவர்கள் கொண்டாடப்பட வேண்டியவர்கள் இல்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:18 AM
பகிர்:

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 பேருமே குற்றவாளிகள்தான், அவர்கள் கொண்டாடப்பட வேண்டியவர்கள் இல்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: 

உச்சநீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்துள்ளது. இவ்வளவு ஆண்டு காலம் சிறைத்தண்டனை அனுபவித்த பிறகு, அவரது நன்னடத்தை காரணமாக விடுதலை செய்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம்.  

அதற்காக அவர் நிரபராதி அல்ல, அவரும் குற்றவாளிதான். ஆனால், திமுக அரசு அவரை நிரபராதிபோல கொண்டாடுகிறது. 

முதல்வர், அமைச்சர்கள் அனைவரும், ஒரு நிரபராதியை விடுதலை செய்வது போல கொண்டாடுவது, பேசுவது எல்லாம், உண்மையில் முதல்வர் அரசியலைப்புச் சட்டத்தின் மீது சத்தியப் பிரமாணம் செய்துவிட்டுதான் ஆட்சி நடத்துகிறாரா என்ற சந்தேகம் எழுகிறது. பேரறிவாளன் விடுதலையைக் கொண்டாடி ஒரு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகிறார்கள். 

முன்னாள் பிரதமர் கொலையில் அவரது குற்றம் பலமுறை உறுதி செய்யப்பட்டுதான் தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. தற்போது நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். இந்த தீர்ப்பு மற்ற 6 பேருக்கும் பொருந்தாது. 

திமுக ஆட்சிப்பொறுப்பு ஏற்றதில் இருந்து பேரறிவாளனுக்கு தொடர்ந்து பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

மேலும் இந்த விஷயத்தில் காங்கிரஸ் இரட்டை வேடம் போடுகிறது. நளினியின் தண்டனையைக் குறைக்க சோனியா காந்தி உதவியது, ராஜீவ் கொலை குற்றவாளிகளை மன்னித்துவிட்டோம் என்று பிரியங்கா காந்தி கூறியது, இப்போது பேரறிவாளன் விடுதலைக்கு எதிராக கே.எஸ்.அழகிரி போராட்டம் அறிவிப்பது என அவர்களது கொள்கை ஒன்றுக்கொன்று மாறாக இருக்கிறது. 

பேரறிவாளன் விடுதலைக்கு எதிராக இன்று போராட்டம் நடத்தும் காங்கிரஸ், தைரியம் இருந்தால், திமுக அரசுக்கு கொடுத்த ஆதரவை திரும்பப் பெறட்டும்' என்று பேசியுள்ளார். 

மேலும், நெல்லை கல்குவாரி விபத்து குறித்து பேசிய அண்ணாமலை, 'மார்ச் 2021ல் பாதுகாப்பின்மை காரணமாக சீல் வைக்கப்பட்ட கல்குவாரி, திமுக ஆட்சியில் திறக்கப்பட்டுள்ளது. குவாரிக்கு சொந்தமானவர் காங்கிரஸ் கட்சி சார்ந்த ஒருவர். இதனால் இந்த விபத்து தெரிந்தே நடந்திருக்கிறது. கல்குவாரி விபத்துக்கு திமுக தான் காரணம். மாநில அரசு 'ஒரு நபர் ஆணையம்' அமைத்து இதுகுறித்து விசாரிப்பதுடன் அனைத்து குவாரிகளையும் ஆய்வு செய்ய வேண்டும்' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.