கோவில் புனரமைப்பதாக மோசடி: யூடியூபருக்கு 15 நாள் காவல்
கோவில்களைப் புனரமைப்பதாக பொதுமக்களிடம் இருந்து நிதி திரட்டி ரூ. 44 லட்சம் மோசடி செய்த பாஜகவை சேர்ந்த கார்த்திக் கோபிநாத்துக்கு 15 நாள்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.
கோவில்களைப் புனரமைப்பதாக பொதுமக்களிடம் இருந்து நிதி திரட்டி ரூ. 44 லட்சம் மோசடி செய்த பாஜகவை சேர்ந்த கார்த்திக் கோபிநாத்துக்கு 15 நாள்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.
சிறுவாச்சூர் கோயிலை புனரமைப்பதாக கூறி ரூ.44 லட்சம் வசூலித்து மோசடி செய்ததாக கார்த்திக் கோபிநாத்தை தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.
ஆவடி அடுத்த முத்தாபுதுப்பேட்டை, சபி நகர், 3 ஆவது தெரு சேர்ந்தவர் கார்த்திக் கோபிநாத் (33). இவர் இளைய பாரதம் என்ற பெயரில் யூடியூப் சமூக வலைத்தளம் நடத்தி வருகிறார். இவர் மிலாப் ஃபண்ட் ரைசேர் சைட் என்ற தளம் மூலமாக சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலின் உப கோவில்களில் உள்ள பழுதடைந்த சிலைகளை புனரமைப்பதாக பொதுமக்களிடம் இருந்து ரூ. 44 லட்சம் நிதி திரட்டியுள்ளார். இதற்கு அவர் இந்து சமய அறநிலையத்துறையிடம் முறையான அனுமதி பெறவில்லை.
மேலும், கார்த்திக் கோபிநாத் அந்தப் பணத்தை தனது சுய லாபத்திற்காக பயன்படுத்திக் கொண்டுள்ளார். எனவே, அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூர் அருள்மிகு மதுரகாளி அம்மன் திருக்கோயிலில் செயல் அலுவலராக இருக்கும் தா.அரவிந்தன் மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளார்.
இதனையடுத்து குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் ஜெயச்சந்திரன் தலைமையில் தனிப்படை காவலர்கள் கார்த்திக் கோபிநாத்தை திங்கள்கிழமை கைது செய்தனர்.