ரூ.35.84 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்
துபையில் இருந்து விமானத்தில் சென்னைக்கு கடத்த வரப்பட்ட ரூ.35.84 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
துபையில் இருந்து விமானத்தில் சென்னைக்கு கடத்த வரப்பட்ட ரூ.35.84 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
துபையில் இருந்து கடந்த 13-ஆம் தேதி வந்த ஒரு விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய சுங்கத்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் சுங்கத்துறையினா், அந்த விமானத்தில் வந்திறங்கிய பயணிகளை தீவிர சோதனையிட்டனா். இச் சோதனையில் முருகன் கோவிந்தராஜூ என்ற பயணி, 3 தங்க கட்டிகள், ஒரு தங்க பெல்ட் பட்டை ஆகியவற்றை தனது பேண்ட்டில் மறைத்து எடுத்து வந்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து சுங்கத்துறையினா் ரூ.25.99 லட்சம் மதிப்புள்ள 580 கிராம் எடைகொண்ட அந்த தங்கத்தை பறிமுதல் செய்து, முருகனிடம் விசாரணை செய்தனா்.
மற்றொரு சம்பவத்தில் அதே நாளில் துபையில் இருந்து வந்த விமானத்தை சோதனையிட்டதில், அந்த விமானத்தின் முன்பக்க இருந்த கழிப்பறையில் ஒரு தங்கச்சங்கிலி மறைத்து வைக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த தங்கச் சங்கிலி ரூ.9.85 லட்சம் மதிப்புள்ள 220 கிராம் எடை கொண்டதாகும். இதையும் பறிமுதல் செய்து, சுங்கத்துறையினா் விசாரணை செய்கின்றனா். இச் சம்பவங்களிலும் மொத்தம் ரூ. ரூ.35.84 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடதக்கது. இத் தகவலை விமான நிலைய சுங்கத்துறையினா் தெரிவித்தனா்.