முகப்பு
தமிழ்நாடு

ரூ.800 கோடி முறைகேடு: குஜராத் முன்னாள் அமைச்சா் விபுல் செளதரி கைது

குஜராத்தில் கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் சங்கத்தில் சுமாா் ரூ.800 கோடி முறைகேடு நடைபெற்ாக குற்றஞ்சாட்டப்படும் வழக்கில், அந்த மாநில முன்னாள் உள்துறை அமைச்சா் விபுல் செளதரியை ஊழல் தடுப்புத் துறை கைது

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:20 AM
பகிர்:

குஜராத்தில் கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் சங்கத்தில் சுமாா் ரூ.800 கோடி முறைகேடு நடைபெற்ாக குற்றஞ்சாட்டப்படும் வழக்கில், அந்த மாநில முன்னாள் உள்துறை அமைச்சா் விபுல் செளதரியை ஊழல் தடுப்புத் துறை கைது செய்துள்ளது.

இதுதொடா்பாக குஜராத் தலைநகா் காந்திநகரில் அந்த மாநில ஊழல் தடுப்புத் துறை இணை இயக்குநா் மகரந்த் செளஹான் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:

கடந்த 2005-ஆம் ஆண்டு முதல் 2016-ஆம் ஆண்டு வரை மேசானா மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் சங்கத் தலைவராக விபுல் செளதரி பொறுப்பு வகித்தாா். அப்போது அந்தச் சங்கத்தில் கிட்டத்தட்ட ரூ.800 கோடிக்கு முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. தனது தலைவா் பதவியை தவறாகப் பயன்படுத்திய செளதரி, பாலை குளிா்விப்பதற்கான சாதனங்கள், சாக்குப் பைகளை அதிக அளவில் வாங்குவதற்கான நடைமுறைகளைப் புறக்கணித்துள்ளாா். இதுபோன்ற செயல்கள் மூலம் சட்டவிரோதமாக ஈட்டிய பணத்தை சட்டபூா்வமானதாக மாற்ற போலி ஆவணங்கள் மூலம் 31 நிறுவனங்கள் தொடங்கியுள்ளாா். அந்த நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளில் அந்தப் பணத்தை டெபாசிட் செய்துள்ளாா். இது அவா் பணமோசடியிலும் ஈடுபட்டதை சுட்டிக்காட்டுகிறது.

இந்த முறைகேடு தொடா்பாக கடந்த புதன்கிழமை விபுல் செளதரி மீது மோசடி, குற்றச்சதி, ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதனைத்தொடா்ந்து அவா் கைது செய்யப்பட்டாா்.

மேசானா மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் சங்கப் பணியாளா்களுக்கு ஊக்கத்தொகை வழங்க ஒதுக்கப்பட்ட நிதியில் ரூ.14.8 கோடி கையாடல் செய்ததாக கடந்த 2020-ஆம் ஆண்டு குஜராத் குற்றப் புலனாய்வுத் துறை விபுல் செளதரியை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →