சேலம்: அந்தரத்தில் தொங்கியபடி அலகு குத்தி ஊர்வலம் வந்த பக்தர்கள்
குமாரசாமிப்பட்டி எல்லைப்பிடாரி அம்மன் திருக்கோயிலில், குழந்தை வரம் வேண்டி அந்தரத்தில் தொங்கியபடி அலகு குத்தி ஊர்வலமாக வந்து பக்தர்கள் பரவசம்.
சேலம்: குமாரசாமிப்பட்டி எல்லைப்பிடாரி அம்மன் திருக்கோயிலில், குழந்தை வரம் வேண்டி அந்தரத்தில் தொங்கியபடி அலகு குத்தி ஊர்வலமாக வந்து பக்தர்கள் பரவசம் அடைந்தனர்.
சேலம் குமாரசாமி பட்டி பகுதியில் மிகவும் பழமையான மற்றும் பிரசித்திபெற்ற அருள் மிகு ஸ்ரீ எல்லைப்பிடாரி அம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த திருக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் திருவிழா நடைபெறுவது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக கரோனா கட்டுப்பாட்டால் விழா நடைபெறாமல் இருந்தது. இந்த நிலையில் கட்டுப்பாடுகள் முற்றிலும் தளர்தப்பட்டதால் இந்த ஆண்டு திருவிழா நடத்த நடவடிக்கை எடுத்து கடந்த வாரம் திருவிழா துவங்கியது.
எல்லைப்பிடாரி அம்மன் கோவிலில் பூ சாட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கி தொடர்ந்து அம்மனுக்கு சக்தி அழைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான அலகு குத்தும்நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தொடர்ந்து சிறப்பு அர்ச்சனை நடைபெற்றது, மேலும் நேர்த்திகடன்வேண்டி கொண்ட பக்தர்கள் குழந்தை பாக்கியம் பெறவும், குடும்பத்தில் சந்தோசம் நிலவவும் திருமணதடை நீங்கவும் என பல்வேறு வகையான வேண்டுதல் நிறைவேற்றி தந்த அம்மனுக்கு பக்தர்கள் முகம் மற்றும் முதுகின் பின்புறம் மிகவும் கூர்மையான கத்தியை குத்தி கொண்டும், நீளமான அடியுள்ள சூலத்தை வாயில் அலகு குத்தியும், பட்டா கத்தி அலகு, விமான அலகு என பல்வேறு விதமான அலகுகளை உடலில் குத்திக்கொண்டு வின்சென்ட், குமாராசாமி பட்டி என நகரின் பல்வேறு வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்று மீண்டும் திருக்கோயிலை வந்தடைந்தனர்.
Advertisement
இந்த அலகு குத்தும் ஊர்வலத்தை காண அப்பகுதியில் இருந்து ஏராளமான பகதர்கள் நீண்ட நேரம் காத்திருந்து அலகு குத்தும் பக்தர்களை கண்டு பரவசம் அடைந்தனர். அதனை தொடர்ந்து அம்மனுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது, இதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.